Monday, October 31, 2005

சன் டிவி பற்றிய குறிப்பும் சில எதிர்வினைகளும்

சென்னை மழை பற்றிய என்னுடைய முந்தைய பதிவு தொடர்பாக ஊடக வன்முறை குறித்த தங்கள் தீவிரமான பார்வைகளை முன்வைத்த நண்பர்களுக்கு நன்றி. அதில் இரண்டு எதிர்வினைகள் பற்றி இங்கு குறிப்பிடவிரும்புகிறேன்.

சத்யம் என்ற பெயரில் இடப்பட்ட எதிர்வினையில் நான் என்னைவிட வசதியான ஊடகத்தை பார்த்து வயிற்றெரிச்சலில் இப்படி எழுதிருக்கிறேன் என்கிறது. இன்னொரு பெயரில்லாத எதிர்வினை பெண்களுக்கு ஆபாச sms அனுப்புவதைவிட்டு சன் டிவிக்காக கண்ணீர் விடலாம் என்கிறது. தமிழ் வலைபதிவுகளிஎழுதுபவர்களின் தார்மீகமின்மைகள் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இதுபோன்ற அவதூறுகளின் நோக்கம்:

1. ஒரு விவாதத்தை முறித்து திசை திருப்புவது.
2.அவமானப்படுத்தி குரூர திருப்தி அடைவது.
3. அசலாக ஒரு வாக்கியத்தையோ அபிப்ராயத்தையோ உருவாக்க முடியாமல் பிறரது அபிப்ராயங்களின் நிழலில் சுய மைதுனம் செய்வது.
4. இருட்டிலிருந்து கல்லெறிந்து அபிப்ராயங்களை உருவாக்குபவர்களை துரத்துவது.

இதுபோன்ற ஆபாசங்களை வலைப்பதிவிலிருந்து நீக்கிவிடுவது சுலபம். ஆனால் அதை நான் செய்ய மாட்டேன். ஒரு சமூகத்தில் ஆபாசமும் வக்கிரமும் பதிவு செய்யப்படவேண்டும். அப்போதுதான் நம்மால் அதை எதிர்கொள்ள முடியும். நோயின் அறிகுறிகள் சுதந்திரமாக வெளிவரவேண்டும். சமூகவியலிலும் உளவியலிலும் ஆர்வம்கொண்ட எழுத்தாளன் என்ற வகையில் இதுபோன்ற பதிவுகள் எனக்கு உற்சாகம் அளிக்கின்றன. இவற்றை எழுதும் நபர்கள் இன்னும் கூட தங்களது மனோவிகாரத்தையும் கீழ்மையையும் விரிவாக பதிவு செய்வது அவசியம். வலைப்பதிவுகளின் உபயோகமும் கருத்து சுதந்திரத்தின் பயன்பாடும் தமிழ் வலைப்பதிவுகளில் முற்றிலும் புதிய தளத்தை எட்டியிருப்பதை மகிழ்ச்சியுடன் அங்கீகரிக்கிறேன்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Thursday, October 27, 2005

சென்னை மழையில் சன் டிவியின் உளவியல் வன்முறை

சென்னையில் பேய் மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. பல்வேறு துறையினராலும் நாசமாக்கபட்ட சாலைகளில் தண்ணீர் வடிய வசதியின்றி ஜனங்கள் கடும் இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர். வீடுகளில் தண்ணீர் வந்தது பற்றி நண்பர்கள் தொலைபேசியில் தெரிவித்துவருகின்றனர். சில பகுதிகளில் முழங்கால்வரை தண்ணீர் ஓடுகிறது என்றும் தெரிவித்தனர். காலையில் ஒன்பது மணியிலிருந்து மின்சாரம் நிறுத்தபட்டு மாலை நான்கு மணிக்கு மீண்டும் வந்தது. அவ்வளவுதான் பிடித்தது சனியன். சன் டிவியில் சென்னையே பிரளயத்தில் மூழ்கிக் கொண்டிருப்பதாக அலறல். நேரடி ஒளிபரப்பில் அதன் செய்தியாளர்; அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல் மக்கள் நடுங்குவதாக தெரிவிக்கிறார். அப்புறம் மும்பை மழையை விடக் கடுமையாக மழை பெய்யப் போகிறது என்று பயமுறுத்துகிறார். வானிலை அதிகாரியின் பேட்டியில் அப்படி எதுவும் இல்லை. கார்பரேஷன் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்களா என்று ஸ்டுடியோவிலிருந்து தொகுப்பாளர் கேட்கிறார். நடவடிக்கை எடுத்தார்கள், ஆனால் எந்த அளவுக்கு எடுத்தார்கள் என்று தெரியவில்லை என ஆரம்பித்து உடனடியாக மக்களின் அவதியை ஆளும் கட்சிக்கு எதிராக ஆதாயமாக்கிக் கொள்ளும் முயற்சி...

இது போன்ற நெருக்கடியான சந்தர்பங்களில் மக்களுக்கு நம்பிக்கையும் வழிகாட்டுதலும் தேவை. ஆனால் செய்திகள் மிகைப்படுத்தப்படுவது மட்டுமல்ல அவை பீதி ஊட்டும் வகையில் திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன. வதந்திகள் பெருகுகின்றன.

சுனாமியின்போதும் இதுதான் நடந்தது. ஊடகங்களின் வன்முறை நமக்குப் புதிதல்ல. ஆனால் எப்போதும் அவை மக்களுக்கு மேல் பிணந்தின்னிக் கழுகாக பறந்துகொண்டிருக்க வேண்டுமா என்ன?

நாளை காலை புயல் கரையை கடக்கும் என்கிறார்கள். நாம் சன் டிவியை எப்படி கடப்பது என்றுதான் தெரியவில்லை.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Sunday, October 16, 2005

சுராவின் மறைவும் இருப்பும்

(சுரா மறைந்த நான்கு மணிநேரத்திற்குப் பிறகு அதைபற்றிய முதல் பதிவினை உயிர்மை பதிவினில் அளித்தேன். அது தென்பட்டு மறைந்துபோனதாக திரு.பத்ரி தனது வலைப்பதிவினில் குறிப்பிட்ட பிறகே எனக்கு அது காணமல் போனது தெரியும். அது இப்போது அவ்வளவு முக்கியமல்ல. செய்தி அறிந்த முதல் கணத்தில் தோன்றிய குழப்பமான நடுங்கும் சொற்களை நான் மறுபடி இட விரும்பவில்லை. ஒரு வார இதழுகாக அளித்த அஞ்சலிக் குறிப்பினை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்)

சுராவின் மறைவு ஒரு மரணத்தைபற்றிய எல்லா சம்பிராதயமான சொற்களையும் கலைத்துவிடகூடியதாக இருக்கிறது. ஒரு எழுத்தாளராகவும் ஆசானாகவும் நண்பராகவும் பத்தாண்டுகளுக்கும் மேலாக சுந்தர ராமசாமியிடம் கொண்டிருந்த ஆழமான உறவின் மீது இந்த மரணம் ஒரு கொடுங்கனவைப்போல படர்ந்துகொண்டிருக்கிறது. அவை வெறும் நினைவுகளோ ஒரு ஆளுமையைப் பற்றிய பதிவுகளோ அல்ல. சுந்தரராமசாமியின் வழியாக உருவாகிவந்த ஒரு தலைமுறைப் படைபாளிகளில் ஒருவன் என்ற முறையில் இந்த மரணத்தை எப்படி நிராகரிப்பது, ஒப்புக் கொள்ள மறுப்பது என்பதுதான் என்னுடைய பிரச்சினை.

இளம்பிராயத்தில் ஜே.ஜே சிலகுறிப்புகளைப் படித்து மனப் பிறழ்வுக்கு ஆளானவர்களில் நானும் ஒருவன். ஜே.ஜே உருவாக்கிய நிம்மதியின்மைகளும் கேள்விகளும் அன்றாட வாழ்வில் என்னுடைய சகஜமான இருப்பை நிலை குலைய வைத்தன. அந்த நிம்மதியின்மையோடு சுராவை போய்பார்த்தேன். இளைஞர்களிடம் அவர் பாராட்டிய தோழமை உணர்வு மகத்தானது. சொல்வதைக் காட்டிலும் அவர் கேட்பவராக இருந்தார். அறிவுறுத்துவதைக் காட்டிலும் புரிந்துகொள்ள விரும்புபவராக இருந்தார். எப்போதும் இது அவருடன் ஒரு இணக்கத்தையும் நம்மைப் பற்றிய பதட்டத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது.

அவர் தொடங்கி இடைநிறுத்திய காலச்சுவடு இதழ் மீண்டும் தொடங்கப்பட்டபோது அதன் ஆசிரியர் குழுவில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இது சுமார் பத்தாண்டுகாலம் சுராவுடன் தீவிரமான பரிமாற்றங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்தது. இந்தச் சந்தர்ப்பம் எனது மொழியை சிந்தனையை மனோபாவத்தை கடுமையாக பாதித்தது. நான் அவருடைய ஆளுமையால் தீவிரமாக ஆக்கரமிக்கப்படுபவனாகவும் எனக்குள் அதை சிலசமயம் எதிர்த்துப் போராடுபவனாகவும் இருந்திருக்கிறேன்.


சுமார் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சுரா ஒரு இயக்கமாக இருந்தார். தமிழ் வாழ்வில் சிறுமைகள் குறித்த கண்டங்களும் கேள்விகளும் அவரது எழுத்துக்களின் அடிப்படை நீரோட்டமாக இருந்திருக்கிறது. இந்தக் கேள்விகளை அவர் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. பல எழுத்தாளர்கள் தங்கள் வாழ்வில் செய்துகொள்ள நேர்ந்த சமரசங்கள் எதையும் சுரா செய்துகொள்ள நேரவில்லை.

தமிழில் மிகவும் அதிகமாக விமர்சிக்கப்பட்ட எழுத்தளாராக சுந்தர ராமசாமியைத்தான் குறிப்பிட முடியும். இலக்கியம் சார்ந்த காரணங்களைவிட இலக்கியம் அல்லாத காரணங்களுக்காவே அவர் பெரிதும் விமர்சிக்கப்பட்டிருக்கிரார். எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. ஆனால் சுரா தனது அரசியலையும் நம்பிக்கைகளையும் தெளிவாக முன்வைத்தார். அதனாலே அவரை விமர்சிப்பவர்களுக்கான ஆயுதங்களை அவரே எப்போதும் வழங்கினார். ஆனால் அவருடைய எல்லா சிந்தனைகளும் செயல்பாடுகளும் ஒரு வெட்ட வெளியில் மூட்டப்பட்ட நெருப்பைப் போல சில சமயம் புகைந்துகொண்டும் சில சமயம் எரிந்துகொண்டும் இருந்தன.

சுரா தமிழில் மூன்று தலைமுறை படைப்பாளிகளை பாதித்திருக்கிறார். அவர் இலக்கியத்தில் உருவாகிய சில மதிப்பிடுகளும் சமூகத்தைப் பற்றிய விமர்சனங்களும் பல்வேறு விவாதங்களை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அவரது கேள்விகள் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும். இந்த கேள்விகள் சில சமயங்களில் சுராவைப் பற்றிய கேள்விகளாகவும் பல சமயங்களில் நம்மைப் பற்றிய கேளிவிகளாகவும் இருப்பது தவிர்க்க இயலாது.

சுரா ஒரு யுகத்தின் அடையாளம். அந்த யுகம் மறைந்துகொண்டிருக்கிறது. அது தன்னுடன் சுராவையும் எடுத்துசெல்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவரது மரணம் சந்திப்பதற்கு கடினமானதாகவும் ஒரு உறைபனியைப்போல சருமத்தை துளைப்பதாகவும் இருக்கிறது.

சுராவின் மரணம் சட்டென ஒரு இடைவெளியை உருவாக்கிவிட்டது. அதைக் கடப்பது அவ்வளவு எளிதாக இல்லை.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com