Tuesday, April 12, 2005
புதிய கவிதைகள்-10
மழை வரும்போது
வந்து சேரும் இந்தத் துக்கம்
ஒரு துக்கத்தைப் போலவே
இல்லை அது
துக்கத்தில் தழுவிக்
கிடக்கும் பெண்
ஒரு பெண் போலவே
இல்லை நீ
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
Friday, April 08, 2005
புதிய கவிதைகள்-9
''அப்பா நீங்கள்
வீட்டிற்குப் போங்கள்
நான் எப்போதாவது வருவேன்"
மகளின்
உலர்ந்த கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்
கைப்பையை திறந்து திறந்து மூடும்
கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்
தனக்குள் முணுமுணுக்கும் உதடுகளின்
தனிமையை பார்த்துக் கொண்டிருந்தான்
கண்ணீரேயில்லாத
பிரிவுகளை பார்த்துக்கொண்டிருந்தான்
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
Thursday, April 07, 2005
புதிய கவிதைகள்-8
இறுக மூடிய கைகளை
அவ்வளவு பலவந்தமாக பிரித்துப் பார்த்தீர்கள்
எதற்காகவோ பூட்டி வைத்திருந்த அறையை
கள்ளச் சாவியிட்டு திறந்தீர்கள்
வழியில் கண்டெடுத்த ஏவல் பொம்மையை
வீடுவரை கொண்டு வந்தீர்கள்
ரத்த சாட்சிகளின் மெளனத்தை
வற்புறுத்திக் கலைத்தீர்கள்
ஒரு துரோகத்தின் கதையை
அதன் முடிவுக்கு பயப்படாமல் கேட்கத் தொடங்கினீர்கள்
உங்களுக்கு பைத்தியம் பிடித்த
ஒரு பெளர்ணமியில்
எல்லா உண்மைகளையும் தெரிந்துகொண்டீர்கள்
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
Wednesday, April 06, 2005
புதிய கவிதைகள்-7
பிசாசுகளின் கவிஞன்
பிசாசுகளைப் போலவே நேசிக்கிறான்
அவன் பற்றுகிற உடல்
அவனது உடலாகிறது
எப்போதும் பயத்திற்குள்
அசைகிறது அவன் வேட்கையின் சாயைகள்
அவனது மர்மத்தின் முடிச்சுகளால்
இறுகிக்கொண்டிருக்கிறது உன் குரல்வளை
எவ்வளவு தூரம் கூடவே வந்தாலும்
யாரும் கவனிப்பதில்லை அவனது உடனிருப்பை
அதிகரித்துக்கொண்டிருக்கும்
உன் படுக்கையறையின் வெப்பம்
எந்த மூச்சிலிருந்து கிளைக்கிறதென
நீ அறிய மாட்டாய்
பிசாசுகளின் கவிஞன்
பிசாசுகளைப் போலவே
எல்லா இடத்திலிருந்தும் வெளியேற்றப்படுகிறான்
பிசாசுகளின் கவிஞனுக்கு
பிசாசுகளைவிடவும்
அதிகம் பசிக்கிறது.
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
புதிய கவிதைகள்-6
எல்லோரும்
யாருடனாவது இருந்துகொண்டிருக்கிறார்கள்
தொடுகிற ஒவ்வொரு கையிலிருந்தும்
ஒட்டுகிறது யாரோ ஒருவரின் வியர்வை
எந்தப் பாதையிலும் பின்தொடராமலில்லை
ஏதோ ஒரு காலடிச் சத்தம்
எல்லா இணைப்புகளும்
உபயோகத்தில் இருக்கும்
இந்தத் தொலைபேசியில்
நான் உன்னை வந்தடையும்போது
ஒரு பருவம் கழிந்திருக்கும்.
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
Tuesday, April 05, 2005
புதிய கவிதைகள்-5
ஒரு மலரைப் பறிப்பது
போல்பறித்தாலும் சரி
ஒரு மிருகத்தை வெல்வதுபோல்
வென்றாலும் சரி
ஒன்றுபோலவே இருக்கிறது
ஒரு அன்பைத் தொடர்வது
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
புதிய கவிதைகள்-4
நடக்கலாம்
கால் வலிக்கும்போது கொஞ்சம் உட்காரலாம்
பேசலாம்
வெறுமை சூழும்போது மெளனமாக இருக்கலாம்
கைகளை பற்றிக் கொள்ளலாம்
பயம்வரும்போது கைகளை விலக்கிக் கொள்ளலாம்
ஒரு ஒரு முறை முத்தமிடலாம்
முத்தத்தைப் பற்றி பேச்சு வந்துவிடாமல்
வேறு ஏதாவது பேசலாம்
அவரவர்
வீடு நோக்கிப் போகலாம்.
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
Monday, April 04, 2005
புதிய கவிதைகள்-3
உன் கண்கள்
இங்கே எதையுமே
பார்ப்பதில்லை
ஒழுங்குகளை
ரகசியங்களை
பலவீனங்களை
எப்போதும் கசிந்துகொண்டிருக்கும்
காயங்களை
ஒன்றையும்
அவை உற்றுப் பார்ப்பதில்லை.
உன் கண்கள்
கண்களை மட்டுமேசந்திக்கின்றன.
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
புதிய கவிதைகள்-2
நீ வரப்போவதில்லை
என்ற போதும்
இன்னொரு கோப்பையில்
கொஞ்சம் மதுவை ஊற்றுகிறேன்
எல்லாத் திரைச் சீலைகளையும்
இழுத்துவிட்ட பிறகும்
எப்படியோ கொஞ்சம்
உள்ளே வந்துவிடுகிறது
ஒருபோதும் எதிர்கொள்ள விரும்பாத
அந்தியின் நிழல்கள்.
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
என்ற போதும்
இன்னொரு கோப்பையில்
கொஞ்சம் மதுவை ஊற்றுகிறேன்
எல்லாத் திரைச் சீலைகளையும்
இழுத்துவிட்ட பிறகும்
எப்படியோ கொஞ்சம்
உள்ளே வந்துவிடுகிறது
ஒருபோதும் எதிர்கொள்ள விரும்பாத
அந்தியின் நிழல்கள்.
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
Sunday, April 03, 2005
புதிய கவிதைகள்-1
நம்முடைய இரவுகள்
தேம்புகின்றன
நம்முடைய பகல்கள்
ஆவியாகிவிடுகின்றன
நம்முடைய இந்தக் காதல்
கடலுக்கடியில்
ஒரு புராதனக் கோயிலாக
மிதந்து கொண்டிருக்கிறது.
மனுஷ்ய புத்திரன்
தேம்புகின்றன
நம்முடைய பகல்கள்
ஆவியாகிவிடுகின்றன
நம்முடைய இந்தக் காதல்
கடலுக்கடியில்
ஒரு புராதனக் கோயிலாக
மிதந்து கொண்டிருக்கிறது.
மனுஷ்ய புத்திரன்
Subscribe to:
Posts (Atom)