நண்பர்கள் தினத்தை ஒட்டி இன்றைய தினமணியில் எனது கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. பின்வரும் இணைப்பில் அதைக் காணலாம். நண்பர்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
http://www.dinamani.com/sunday/sundayitems.asp?ID=DS420050805082259&Title=Sunday+%2D+Column&lTitle=%F9R%F4PoLh%D3%FBW
அன்புடன்
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
Sunday, August 07, 2005
Sunday, June 19, 2005
புதிய கவிதைகள்-11
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட
ஒரு மழை நாளில்
குமாஸ்தாக்கள் கோப்புகளிலிருந்து
சற்றே நிமிர்ந்து உட்காருகிறார்கள்
நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு
சற்றே மிதமான தண்டணைகளை
வழங்குகிறார்கள்
கணவர்கள் மனைவிகளுக்கு அளிக்கும்
சுதந்திரத்தைக் கண்காணிக்க கொஞ்சம் மறந்துபோகிறார்கள்.
ஒரு கண்டன ஊர்வலம்
சட்டென மகிழ்ச்சியான ஒரு மன நிலைக்கு மாறுகிறது
செய்யப்படாத வேலைகள் பற்றி
தொழிலாளிகள் பயம் குறைந்து காணப்படுகிறார்கள்
வேலை கொடுத்துக்கொண்டிருப்பதை
மறந்து முதலாளிகளும் கொஞ்சம் மழையை வேடிக்கை பார்க்கிறார்கள்
பெட்ரோல் பங்கில் எனக்கு பின்னால் காத்திருப்பவன்
இன்று எந்த விரோதமும் இல்லாமல் இருக்கிறான்
வகுப்பறைகளில் குழந்தைகள்
ஆசிரியர்களைப் பற்றிய பயங்கரம் நீங்கி
வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
நண்பர்கள்
நண்பர்களைப் போலவே காட்சியளிக்கிறார்கள்.
எல்லா இடத்திலும் ஈரம் பரவிக்கொண்டிருந்த
ஒரு மழை நாளில்
நான் என் காதலைச் சொன்னபோது
நீ அதை
மறுக்கவும் இல்லை
ஏற்கவும் இல்லை
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
Tuesday, April 12, 2005
புதிய கவிதைகள்-10
மழை வரும்போது
வந்து சேரும் இந்தத் துக்கம்
ஒரு துக்கத்தைப் போலவே
இல்லை அது
துக்கத்தில் தழுவிக்
கிடக்கும் பெண்
ஒரு பெண் போலவே
இல்லை நீ
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
Friday, April 08, 2005
புதிய கவிதைகள்-9
''அப்பா நீங்கள்
வீட்டிற்குப் போங்கள்
நான் எப்போதாவது வருவேன்"
மகளின்
உலர்ந்த கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்
கைப்பையை திறந்து திறந்து மூடும்
கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்
தனக்குள் முணுமுணுக்கும் உதடுகளின்
தனிமையை பார்த்துக் கொண்டிருந்தான்
கண்ணீரேயில்லாத
பிரிவுகளை பார்த்துக்கொண்டிருந்தான்
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
Thursday, April 07, 2005
புதிய கவிதைகள்-8
இறுக மூடிய கைகளை
அவ்வளவு பலவந்தமாக பிரித்துப் பார்த்தீர்கள்
எதற்காகவோ பூட்டி வைத்திருந்த அறையை
கள்ளச் சாவியிட்டு திறந்தீர்கள்
வழியில் கண்டெடுத்த ஏவல் பொம்மையை
வீடுவரை கொண்டு வந்தீர்கள்
ரத்த சாட்சிகளின் மெளனத்தை
வற்புறுத்திக் கலைத்தீர்கள்
ஒரு துரோகத்தின் கதையை
அதன் முடிவுக்கு பயப்படாமல் கேட்கத் தொடங்கினீர்கள்
உங்களுக்கு பைத்தியம் பிடித்த
ஒரு பெளர்ணமியில்
எல்லா உண்மைகளையும் தெரிந்துகொண்டீர்கள்
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
Wednesday, April 06, 2005
புதிய கவிதைகள்-7
பிசாசுகளின் கவிஞன்
பிசாசுகளைப் போலவே நேசிக்கிறான்
அவன் பற்றுகிற உடல்
அவனது உடலாகிறது
எப்போதும் பயத்திற்குள்
அசைகிறது அவன் வேட்கையின் சாயைகள்
அவனது மர்மத்தின் முடிச்சுகளால்
இறுகிக்கொண்டிருக்கிறது உன் குரல்வளை
எவ்வளவு தூரம் கூடவே வந்தாலும்
யாரும் கவனிப்பதில்லை அவனது உடனிருப்பை
அதிகரித்துக்கொண்டிருக்கும்
உன் படுக்கையறையின் வெப்பம்
எந்த மூச்சிலிருந்து கிளைக்கிறதென
நீ அறிய மாட்டாய்
பிசாசுகளின் கவிஞன்
பிசாசுகளைப் போலவே
எல்லா இடத்திலிருந்தும் வெளியேற்றப்படுகிறான்
பிசாசுகளின் கவிஞனுக்கு
பிசாசுகளைவிடவும்
அதிகம் பசிக்கிறது.
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
புதிய கவிதைகள்-6
எல்லோரும்
யாருடனாவது இருந்துகொண்டிருக்கிறார்கள்
தொடுகிற ஒவ்வொரு கையிலிருந்தும்
ஒட்டுகிறது யாரோ ஒருவரின் வியர்வை
எந்தப் பாதையிலும் பின்தொடராமலில்லை
ஏதோ ஒரு காலடிச் சத்தம்
எல்லா இணைப்புகளும்
உபயோகத்தில் இருக்கும்
இந்தத் தொலைபேசியில்
நான் உன்னை வந்தடையும்போது
ஒரு பருவம் கழிந்திருக்கும்.
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
Tuesday, April 05, 2005
புதிய கவிதைகள்-5
ஒரு மலரைப் பறிப்பது
போல்பறித்தாலும் சரி
ஒரு மிருகத்தை வெல்வதுபோல்
வென்றாலும் சரி
ஒன்றுபோலவே இருக்கிறது
ஒரு அன்பைத் தொடர்வது
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
புதிய கவிதைகள்-4
நடக்கலாம்
கால் வலிக்கும்போது கொஞ்சம் உட்காரலாம்
பேசலாம்
வெறுமை சூழும்போது மெளனமாக இருக்கலாம்
கைகளை பற்றிக் கொள்ளலாம்
பயம்வரும்போது கைகளை விலக்கிக் கொள்ளலாம்
ஒரு ஒரு முறை முத்தமிடலாம்
முத்தத்தைப் பற்றி பேச்சு வந்துவிடாமல்
வேறு ஏதாவது பேசலாம்
அவரவர்
வீடு நோக்கிப் போகலாம்.
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
Monday, April 04, 2005
புதிய கவிதைகள்-3
உன் கண்கள்
இங்கே எதையுமே
பார்ப்பதில்லை
ஒழுங்குகளை
ரகசியங்களை
பலவீனங்களை
எப்போதும் கசிந்துகொண்டிருக்கும்
காயங்களை
ஒன்றையும்
அவை உற்றுப் பார்ப்பதில்லை.
உன் கண்கள்
கண்களை மட்டுமேசந்திக்கின்றன.
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
புதிய கவிதைகள்-2
நீ வரப்போவதில்லை
என்ற போதும்
இன்னொரு கோப்பையில்
கொஞ்சம் மதுவை ஊற்றுகிறேன்
எல்லாத் திரைச் சீலைகளையும்
இழுத்துவிட்ட பிறகும்
எப்படியோ கொஞ்சம்
உள்ளே வந்துவிடுகிறது
ஒருபோதும் எதிர்கொள்ள விரும்பாத
அந்தியின் நிழல்கள்.
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
என்ற போதும்
இன்னொரு கோப்பையில்
கொஞ்சம் மதுவை ஊற்றுகிறேன்
எல்லாத் திரைச் சீலைகளையும்
இழுத்துவிட்ட பிறகும்
எப்படியோ கொஞ்சம்
உள்ளே வந்துவிடுகிறது
ஒருபோதும் எதிர்கொள்ள விரும்பாத
அந்தியின் நிழல்கள்.
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
Sunday, April 03, 2005
புதிய கவிதைகள்-1
நம்முடைய இரவுகள்
தேம்புகின்றன
நம்முடைய பகல்கள்
ஆவியாகிவிடுகின்றன
நம்முடைய இந்தக் காதல்
கடலுக்கடியில்
ஒரு புராதனக் கோயிலாக
மிதந்து கொண்டிருக்கிறது.
மனுஷ்ய புத்திரன்
தேம்புகின்றன
நம்முடைய பகல்கள்
ஆவியாகிவிடுகின்றன
நம்முடைய இந்தக் காதல்
கடலுக்கடியில்
ஒரு புராதனக் கோயிலாக
மிதந்து கொண்டிருக்கிறது.
மனுஷ்ய புத்திரன்
Tuesday, March 22, 2005
சவக் கிடங்கிற்குச் செல்லும் விடுதலை ரயில்
ஷோபாசக்தியின் 'ம்'
மனுஷ்ய புத்திரன்
வன்முறை தோய்ந்த சமகால அரசியல் சமூக வரலாற்றை எழுதுவதென்பது ஒரு கலைஞனுக்கு ஏற்படுத்தும் சவால்கள் கடுமையானவை. அரசியல் நிலைப்பாடுகளும் அறவியல் சார்ந்த ஆதாரமான கேள்விகளும் பல சமயங்களில் எதிர் நிலைகளாகிவிடுகின்றன. ஒருவரது அரசியல் நம்பிக்கைகள், நிலைபாடுகள் குறித்த கேள்விகள் தீவிரமடையும்போது உண்மைகளைவிட நிலைப்பாடுகளும் அறத்தைவிட கொள்கைகளும் முக்கியமடைந்துவிடுகின்றன. ஆனால் ஒரு கலைஞன் அரசியல் ரீதியாக நியாப்படுத்தப்படும் கொலைகளின் பின்னிருக்கும் ரத்தக் கவுச்சியையும் மறைக்கப்படும் வாதைகளின் கூக்குரலையும் கேட்கவேண்டியவனாகிவிடுகிறான். அவ்வாறு கேட்கும்போது அவனது நம்பிக்கைகள் முற்றாகக் கலைக்கப்பட்டு வாழுதலின் அர்த்தத்தையும் நீதியையும் சிதைவுகளின் ஊடே தேடிச் செல்கிறான். அவ்வாறு தேடிச் செல்லும் கதையே ஷோபா சக்தியின் 'ம்'
1980க்ளுக்குப் பிந்தைய ஈழத்தின் அரசியல் சரித்திரத்தை சொல்லும் இக்கதை உண்மையில் ஒரு தேசத்தின் வரலாற்றையோ, சித்திரவதைகளின் கதையையோ, அல்லது இதுவரை சொல்லப்படாத சம்பவங்களையோ சொல்லப்பட்டதைவிட அதிகமான குரூரங்களையோ சொல்லிவிடவில்லை. நேசகுமாரனுக்கு நடந்தவை அனைத்தும் பல்வேறு வழிகளில் நம்மால் கேட்கப்பட்டுவிட்டன. ஆனால் இதுவரை கேட்ககப்படாதது இந்த கதைக்குள் வாழும் ஒரு மனிதனின் தன்னழிவும் மன முறிவும்தான். இந்தத் தன்னழிவு வரலாற்றில் பதிவு செய்ய முடியாதது. வரலாற்றை உருவாக்கும் மாமனிதர்களின் கனவுகளில், தியாகங்களுக்கான அறைகூவல்களில்., மாபெரும் விடுதலை இலட்சியங்களில் இந்தத் தன்னழிவிற்கு இடம் கிடையாது. அவை பைத்தியக்கார்களின் குறிப்பேடுகளில் கிறுக்கபட்ட ரகசியக் குறிப்புகளாகிவிடுகின்றன. இந்த ரகசியக் குறிப்புகள் வாழ்க்கையின் மீதான எல்லாக் கற்பிதங்களையும் எள்ளி நகையாடுகின்றன. சிதறடிக்கப்பட்ட மனிதன் என்ற கற்பிதத்தின் சிதிலங்களிலிருந்துதான் ஷோபாசக்தின் இந்த நாவல் தொகுக்கப்படுகிறது. போராட்டம், விடுதலை, தியாகம், புனிதமரணங்கள் என அலங்கரிக்கப்பட்ட மகத்தான பலிபீடங்களை இக்கதை தகர்த்து விடுகிறது.
ஷோபாசக்தி வன்முறையின் எல்லாப் பக்கங்கங்களையும் திறந்து பார்க்கிறார். ஒடுக்குமுறைக்கும் விடுதலைக்குமிடையே வாழ்வின் ஒவ்வொரு மூலையையும் இந்த வன்முறை சூழ்ந்திருக்கிறது. 83 ஜூலைக் கலவரங்களின்போது வெலிகட சிறையில் நடந்த படுகொலை சம்பவங்கள் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் மிக முக்கியமான திட்டமிட்ட மனித அழிப்புகளில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஈழப் போராட்டத்தின் பெருங்கனலை மூட்டிய இந்த அழித்தொழிப்பைப் பற்றிய மிகத் துல்லியமான விபரங்களைத் தரும் ஷோபா சக்தி ஆஷ்ட்விச் முகாம்களைப் பற்றிய குறிப்புகளோடு ஒத்துப்போகும் இலங்கைச் சிறைச்சாலைகள் பற்றிய குறிப்புகளை விரிவாகப் பதிவு செய்கிறார். இதற்கு கொஞ்சமும் குறையாத போராளிகளின் வதை முகாம்கள் பற்றிய விவரணைகள் இணைகோடாக நாவலில் நீள்கிறது. இலங்கை அரசின் வதை முகாம்கள்... போராளிகளின் வதை முகாம்கள்... இவையிரண்டும் விடுதலை என்ற ரயிலின் தண்டவாளங்களாக மாறிவிடுகிறது. விடுதலை ரயிலின் வதை முகாம்களிலான பெட்டிகளில் நேசகுமாரன் தொடர்ந்து மாறி மாறிப் பயணம் செய்கிறான். இந்தப் பயணத்தின் வழிநெடுக சிதைக்கப்படும் உடல்களைத் தவிர வேறு காட்சிகளே இல்லை. ஒரு பிரமாண்டமான சவக் கிடங்கை நோக்கி விடுதலை ரயில் சென்றுகொண்டே இருக்கிறது.
நேசகுமாரன் ஏன் முக்கியமான சந்தர்பங்களில் தனது தோழர்களைக் காட்டிகொடுத்தான்? ஏன் தனது இலட்சியங்களைவிட்டுத் தப்பி ஓடினான்? ஏன் தனது சொந்த மகளின் கர்ப்பத்திற்கு காரணமாக இருந்தான் என்ற கேள்விகளுக்கான பதிலை ஒருவர் அரசியல் ரீதியாகவோ உளவியல்ரீதியாகவோ தேடிச் செல்லலாம். ஆனால் மனிதர்களைத் தூண்டுவது இலட்சியங்கள் மட்டுமல்ல, வாழ்வாசையும் ஆதாரமான இச்சைகளின் தர்க்கமற்ற இயல்புகளும்தான். இந்த இரண்டுக்குமான தீர்க்கமுடியாத முரண்கள்தான் நேசகுமாரனின் செயல்களை தீர்மானிக்கின்றன. குரூரமாக சிதைக்கப்படும் உடல்களிலிருந்தும் மனங்களிலிருந்தும் உருவாகும் புதிய மனிதனுக்கு, இந்த யுகத்தின் மனிதனுக்கு ஒரு குறியீடே நேசகுமாரன். இந்த மனிதன் வீழ்சியிலிருந்தும் அவநம்பிக்கையின் கசப்பிலிருந்தும் பிறப்பவன். சமூகத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் வெளியேற்றப்பட்டவன். தனக்கென நியாயங்கள் இல்லாதவன்.
ஆனால் நேசகுமாரனின் சிறைத் தோழனான பக்கிரி இலட்சியங்களைப் பாதுகாக்க தொடர்ந்து போராடுகிறான். அவன் எந்த இடத்திலும் நம்பிக்கை இழப்பதில்லை. சித்ரவதைகள் அவனை அச்சுறுத்துவதில்லை. அவனது ஆன்மாவை சிதைப்பதுமில்லை. அவன் கொல்லப்படும்வரை விடுதலையின் நெருப்பை அணையவிடாமல் பாதுகாத்துக்கொண்டே இருக்கிறான். பக்கிரியும் நேசகுமாரனும் உண்மையில் ஒரு கனவின் தவிர்க்க முடியாத இரண்டு பாதைகள்.
இந்த நாவலின் கட்டமைப்பு மிகவும் நுட்பமானது. இருபதந்தைந்து ஆண்டுகால ஈழத்து அரசியல் சமூக சரித்திரமும் அதை ஒட்டிய புலம்பெயர் வாழ்வியல்களமும் இந்த சிறிய நாவலில் அதன் எல்லா முரண்பாடுகளோடும் மிக உக்கிரமாக எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க தகவல்கள், குறிப்புகளால் சொல்லப்படும் இக்கதை அக் குறிப்புகள் அடுக்கப்படும், இடம் மாற்றப்படும்வித்தால் ஆழ்ந்த மனக்கசிவையும் அபத்த உணர்வையும் ஏற்படுத்துகிறது.
வாழ்வின் அபத்த முரண்கள் நாவல் முழுக்க குரூரமான அங்கதமாக உருக்கொள்கிறது. ஈழத்த்துப் படைப்புகளின் வெளிப்படும் உணர்ச்சிபூர்வமான சொல்லாடல்கள் எதுவும் ஷோபாசக்தியின் கதைகளில் இடம்பெறுவதில்லை. அன்னியனின் ஈரமற்ற மொழியில் தன்னுடைய உலகத்தைக் கட்டமைக்கிறார். செய்திக் குறிப்புகளை எழுதுபவனின் பாசாங்குடன் புனைவின் உக்கிரத்தை தீண்டுகிறது அவரது மொழி.
ஷோபாசக்தியின் கொரில்லா, தேசதுரோகி ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது வெளிவந்திருக்கும் 'ம்' அவரை ஈழத்து இலக்கியத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த நவீன தமிழ் இலக்கியத்திலுமே முதன்மையான அரசியல் புனைகதையாளனாக முன்னிருத்துகிறது. கருப்புப் பிரதிகள் இந்நாவலை வெகு நேர்த்தியாக பதிப்பித்திருக்கிறது.
'ம்' /நாவல்/ஆசிரியர்: ஷோபாசக்தி.வெளியீடு: கருப்புப் பிரதிகள்,45ஏ, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, சென்னை600 005பக்கம்:168, விலை:ரூ.80.
(இதன் சற்றே சுருக்கப்பட்ட வடிவம் இந்தியா டுடே மார்ச் 30, 2005 இதழில் வெளியாகியிருக்கிறது)
மனுஷ்ய புத்திரன்
வன்முறை தோய்ந்த சமகால அரசியல் சமூக வரலாற்றை எழுதுவதென்பது ஒரு கலைஞனுக்கு ஏற்படுத்தும் சவால்கள் கடுமையானவை. அரசியல் நிலைப்பாடுகளும் அறவியல் சார்ந்த ஆதாரமான கேள்விகளும் பல சமயங்களில் எதிர் நிலைகளாகிவிடுகின்றன. ஒருவரது அரசியல் நம்பிக்கைகள், நிலைபாடுகள் குறித்த கேள்விகள் தீவிரமடையும்போது உண்மைகளைவிட நிலைப்பாடுகளும் அறத்தைவிட கொள்கைகளும் முக்கியமடைந்துவிடுகின்றன. ஆனால் ஒரு கலைஞன் அரசியல் ரீதியாக நியாப்படுத்தப்படும் கொலைகளின் பின்னிருக்கும் ரத்தக் கவுச்சியையும் மறைக்கப்படும் வாதைகளின் கூக்குரலையும் கேட்கவேண்டியவனாகிவிடுகிறான். அவ்வாறு கேட்கும்போது அவனது நம்பிக்கைகள் முற்றாகக் கலைக்கப்பட்டு வாழுதலின் அர்த்தத்தையும் நீதியையும் சிதைவுகளின் ஊடே தேடிச் செல்கிறான். அவ்வாறு தேடிச் செல்லும் கதையே ஷோபா சக்தியின் 'ம்'
1980க்ளுக்குப் பிந்தைய ஈழத்தின் அரசியல் சரித்திரத்தை சொல்லும் இக்கதை உண்மையில் ஒரு தேசத்தின் வரலாற்றையோ, சித்திரவதைகளின் கதையையோ, அல்லது இதுவரை சொல்லப்படாத சம்பவங்களையோ சொல்லப்பட்டதைவிட அதிகமான குரூரங்களையோ சொல்லிவிடவில்லை. நேசகுமாரனுக்கு நடந்தவை அனைத்தும் பல்வேறு வழிகளில் நம்மால் கேட்கப்பட்டுவிட்டன. ஆனால் இதுவரை கேட்ககப்படாதது இந்த கதைக்குள் வாழும் ஒரு மனிதனின் தன்னழிவும் மன முறிவும்தான். இந்தத் தன்னழிவு வரலாற்றில் பதிவு செய்ய முடியாதது. வரலாற்றை உருவாக்கும் மாமனிதர்களின் கனவுகளில், தியாகங்களுக்கான அறைகூவல்களில்., மாபெரும் விடுதலை இலட்சியங்களில் இந்தத் தன்னழிவிற்கு இடம் கிடையாது. அவை பைத்தியக்கார்களின் குறிப்பேடுகளில் கிறுக்கபட்ட ரகசியக் குறிப்புகளாகிவிடுகின்றன. இந்த ரகசியக் குறிப்புகள் வாழ்க்கையின் மீதான எல்லாக் கற்பிதங்களையும் எள்ளி நகையாடுகின்றன. சிதறடிக்கப்பட்ட மனிதன் என்ற கற்பிதத்தின் சிதிலங்களிலிருந்துதான் ஷோபாசக்தின் இந்த நாவல் தொகுக்கப்படுகிறது. போராட்டம், விடுதலை, தியாகம், புனிதமரணங்கள் என அலங்கரிக்கப்பட்ட மகத்தான பலிபீடங்களை இக்கதை தகர்த்து விடுகிறது.
ஷோபாசக்தி வன்முறையின் எல்லாப் பக்கங்கங்களையும் திறந்து பார்க்கிறார். ஒடுக்குமுறைக்கும் விடுதலைக்குமிடையே வாழ்வின் ஒவ்வொரு மூலையையும் இந்த வன்முறை சூழ்ந்திருக்கிறது. 83 ஜூலைக் கலவரங்களின்போது வெலிகட சிறையில் நடந்த படுகொலை சம்பவங்கள் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் மிக முக்கியமான திட்டமிட்ட மனித அழிப்புகளில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஈழப் போராட்டத்தின் பெருங்கனலை மூட்டிய இந்த அழித்தொழிப்பைப் பற்றிய மிகத் துல்லியமான விபரங்களைத் தரும் ஷோபா சக்தி ஆஷ்ட்விச் முகாம்களைப் பற்றிய குறிப்புகளோடு ஒத்துப்போகும் இலங்கைச் சிறைச்சாலைகள் பற்றிய குறிப்புகளை விரிவாகப் பதிவு செய்கிறார். இதற்கு கொஞ்சமும் குறையாத போராளிகளின் வதை முகாம்கள் பற்றிய விவரணைகள் இணைகோடாக நாவலில் நீள்கிறது. இலங்கை அரசின் வதை முகாம்கள்... போராளிகளின் வதை முகாம்கள்... இவையிரண்டும் விடுதலை என்ற ரயிலின் தண்டவாளங்களாக மாறிவிடுகிறது. விடுதலை ரயிலின் வதை முகாம்களிலான பெட்டிகளில் நேசகுமாரன் தொடர்ந்து மாறி மாறிப் பயணம் செய்கிறான். இந்தப் பயணத்தின் வழிநெடுக சிதைக்கப்படும் உடல்களைத் தவிர வேறு காட்சிகளே இல்லை. ஒரு பிரமாண்டமான சவக் கிடங்கை நோக்கி விடுதலை ரயில் சென்றுகொண்டே இருக்கிறது.
நேசகுமாரன் ஏன் முக்கியமான சந்தர்பங்களில் தனது தோழர்களைக் காட்டிகொடுத்தான்? ஏன் தனது இலட்சியங்களைவிட்டுத் தப்பி ஓடினான்? ஏன் தனது சொந்த மகளின் கர்ப்பத்திற்கு காரணமாக இருந்தான் என்ற கேள்விகளுக்கான பதிலை ஒருவர் அரசியல் ரீதியாகவோ உளவியல்ரீதியாகவோ தேடிச் செல்லலாம். ஆனால் மனிதர்களைத் தூண்டுவது இலட்சியங்கள் மட்டுமல்ல, வாழ்வாசையும் ஆதாரமான இச்சைகளின் தர்க்கமற்ற இயல்புகளும்தான். இந்த இரண்டுக்குமான தீர்க்கமுடியாத முரண்கள்தான் நேசகுமாரனின் செயல்களை தீர்மானிக்கின்றன. குரூரமாக சிதைக்கப்படும் உடல்களிலிருந்தும் மனங்களிலிருந்தும் உருவாகும் புதிய மனிதனுக்கு, இந்த யுகத்தின் மனிதனுக்கு ஒரு குறியீடே நேசகுமாரன். இந்த மனிதன் வீழ்சியிலிருந்தும் அவநம்பிக்கையின் கசப்பிலிருந்தும் பிறப்பவன். சமூகத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் வெளியேற்றப்பட்டவன். தனக்கென நியாயங்கள் இல்லாதவன்.
ஆனால் நேசகுமாரனின் சிறைத் தோழனான பக்கிரி இலட்சியங்களைப் பாதுகாக்க தொடர்ந்து போராடுகிறான். அவன் எந்த இடத்திலும் நம்பிக்கை இழப்பதில்லை. சித்ரவதைகள் அவனை அச்சுறுத்துவதில்லை. அவனது ஆன்மாவை சிதைப்பதுமில்லை. அவன் கொல்லப்படும்வரை விடுதலையின் நெருப்பை அணையவிடாமல் பாதுகாத்துக்கொண்டே இருக்கிறான். பக்கிரியும் நேசகுமாரனும் உண்மையில் ஒரு கனவின் தவிர்க்க முடியாத இரண்டு பாதைகள்.
இந்த நாவலின் கட்டமைப்பு மிகவும் நுட்பமானது. இருபதந்தைந்து ஆண்டுகால ஈழத்து அரசியல் சமூக சரித்திரமும் அதை ஒட்டிய புலம்பெயர் வாழ்வியல்களமும் இந்த சிறிய நாவலில் அதன் எல்லா முரண்பாடுகளோடும் மிக உக்கிரமாக எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க தகவல்கள், குறிப்புகளால் சொல்லப்படும் இக்கதை அக் குறிப்புகள் அடுக்கப்படும், இடம் மாற்றப்படும்வித்தால் ஆழ்ந்த மனக்கசிவையும் அபத்த உணர்வையும் ஏற்படுத்துகிறது.
வாழ்வின் அபத்த முரண்கள் நாவல் முழுக்க குரூரமான அங்கதமாக உருக்கொள்கிறது. ஈழத்த்துப் படைப்புகளின் வெளிப்படும் உணர்ச்சிபூர்வமான சொல்லாடல்கள் எதுவும் ஷோபாசக்தியின் கதைகளில் இடம்பெறுவதில்லை. அன்னியனின் ஈரமற்ற மொழியில் தன்னுடைய உலகத்தைக் கட்டமைக்கிறார். செய்திக் குறிப்புகளை எழுதுபவனின் பாசாங்குடன் புனைவின் உக்கிரத்தை தீண்டுகிறது அவரது மொழி.
ஷோபாசக்தியின் கொரில்லா, தேசதுரோகி ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது வெளிவந்திருக்கும் 'ம்' அவரை ஈழத்து இலக்கியத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த நவீன தமிழ் இலக்கியத்திலுமே முதன்மையான அரசியல் புனைகதையாளனாக முன்னிருத்துகிறது. கருப்புப் பிரதிகள் இந்நாவலை வெகு நேர்த்தியாக பதிப்பித்திருக்கிறது.
'ம்' /நாவல்/ஆசிரியர்: ஷோபாசக்தி.வெளியீடு: கருப்புப் பிரதிகள்,45ஏ, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, சென்னை600 005பக்கம்:168, விலை:ரூ.80.
(இதன் சற்றே சுருக்கப்பட்ட வடிவம் இந்தியா டுடே மார்ச் 30, 2005 இதழில் வெளியாகியிருக்கிறது)
Saturday, March 19, 2005
ஜெயகாந்தனுக்கு ஞானபீடம்
ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் அறிவிக்கபட்டிருப்பதாக கவிஞர் சுகுமாரன் சற்றுமுன் தொலைபேசியில் அழைத்து தெரிவித்தார். தமிழுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் சந்தர்ப்பங்களில் அவமான உணர்ச்சி இன்றி பெருமித்தத்துடன் அவற்றை வரவேற்கும் சந்தர்ப்பங்கள் அபூர்வம். ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டிருப்பது அத்தகைய ஒரு சந்தர்ப்பம். தமிழ்க் கதையை தமிழ் வாழ்வின் இருண்ட நிலப்பரப்புகளை நோக்கிச் செலுத்திய ஒரு பெரிய இயக்கம் ஜெயகாந்தன். பிச்சைக்காரர்களும் வேசிகளும் பொறுக்கிகளும் குரூரமாக நசுக்கப்பட்டவர்களும் பிறழ்வுகொண்டவர்களும் ஜெயகாந்தனின் வழியே தமிழ் எழுத்துப் பரப்பிற்கு வந்து சேர்ந்தார்கள். நகர்ப்புற, அக்ரஹார எதார்த்ததிலிருந்து தமிழ் வாழ்க்கையின் பிரமாண்டத்தை நோக்கிய முதல் திறப்பு அவர்.
பாரதிக்குப்பின் தமிழ் எழுத்தாளன் குறித்த ஒரு கம்பீரமான படிமத்தை ஜெயகாந்தன் வழங்கினார். அவரைப்பற்றிய கடும் விமர்சனங்களை இன்று ஒருவர் எழுப்பலாம். ஆனால் அவர் ஒரு தலைமுறையின் பெரும் சக்தி. என் இளமைக்கால ஆளுமையை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றிய அவரை இந்த சமயத்தில் வாழ்த்துவதில் மிகுந்த மன நெகிழ்ச்சி கொள்கிறேன்.
மனுஷ்ய புத்திரன்
பாரதிக்குப்பின் தமிழ் எழுத்தாளன் குறித்த ஒரு கம்பீரமான படிமத்தை ஜெயகாந்தன் வழங்கினார். அவரைப்பற்றிய கடும் விமர்சனங்களை இன்று ஒருவர் எழுப்பலாம். ஆனால் அவர் ஒரு தலைமுறையின் பெரும் சக்தி. என் இளமைக்கால ஆளுமையை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றிய அவரை இந்த சமயத்தில் வாழ்த்துவதில் மிகுந்த மன நெகிழ்ச்சி கொள்கிறேன்.
மனுஷ்ய புத்திரன்
Saturday, February 26, 2005
சுதந்திரம் பிளவு படாதது.
சங்கராச்சாரியார் விவகாரத்தில் ஜெயலலிதா அரசு காட்டி வரும் தீவிரம் இது ஒரு குற்ற வழக்கு மட்டுமல்ல என்ற சந்தேகத்தை ஒவ்வொரு நாளும் தீவிரமடையச் செய்து வருகிறது. அண்மையில் ஆடிட்டர் குருமூர்த்திமீது சங்கராச்சாரியார் விவகாரம் தொடர்பாக எழுதிய கட்டுரைகளுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சட்டப்படி தெரிவிக்கவேண்டிய தகவல்களை மறைத்தல், உயர் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் கூற மறுத்தல், போலி ஆதாரங்களை அளித்தல் என பல்வேறு பிரிவுகளில் குற்றம் சாட்டப்ப்படுள்ளது.. சோ, த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியர் மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோர் குருமூர்த்தியின் கட்டுரைகளை பிரசுரித்ததற்காக காவல்துறையினரால் விசரிக்கப்பட்டிருக்கின்றனர். ஜெயலலிதா அரசு பத்திகைகள் மேல் நடத்திவரும் தாக்குதல்களின் இன்னொரு அத்தியாயமே இந்த வழக்கும் விசாரணைகளும். அரசின் அதிகாரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகள் பற்றிய கேள்விகளை இது மீண்டும் ஒரு முறை விவாதத்திற்குக் கொண்டுவருகிறது.
சோ போன்றவர்கள் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் ஒடுக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது அதில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான பிரிவுகளை எந்தத் தயக்கமும் இன்றி ஆதரித்து நின்றார்கள். அவை தங்களிடம் வராது என்ற ஒரே நம்பிக்கைதான் அதற்குக் காரணம். குருமூர்த்தியின் கருத்துக்கள் இந்துத்வா அமைப்புகள் இப்பிரச்சினையில் வெளியிட்டுவரும் அறிக்கைகளின் இன்னொரு பிரதி மட்டுமே. இந்த வழக்கிற்கு எதிரான கண்மூடித்தனமான எதிர்நிலையை அவரது கட்டுரைகள் வெளிப்படுத்தின. அவை ஒரு பத்திரிகையாளனின் ஆய்வு நிலை சார்ந்த சுயேச்சையான அபிப்ராயங்கள் அல்ல. அது குற்றம் சாட்டபட்ட தரப்பின் நிலைப்பாடு. ஆனால் ஒரு பிரச்சினையில் ஜெயலலிதாவிற்கு உவக்காத கருத்துக்களை சொன்னால் நக்கீரன் கோபால் சந்தித்த அதே விதியைத்தான் சோவும் குருமூர்த்தியும் சந்திக்கவேண்டியிருக்கும் என்பற்கு சாட்சியே இந்த வழக்கு.
பத்திரிகைளில் எழுதப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் தொடர்பாக போலீசிற்கு விளக்கமளிக்கவேண்டும் என்பதை ஒரு விதியாகக் கொண்டால் தமிழக காவல்துறை தனது முழுநேரப் பணியாக அதையே செய்யவேண்டியிருக்கும் .காவல் துறைக்கு பதிலளிக்க மறுப்பதும் அதனிடமிருந்து தகவல்களை மறைப்பதும் ஒரு பத்திரிகையாளனின் ஆதார நெறிகள். இவற்றிற்கு எதிரான சட்டப் பிரிவுகள் நீடித்திருப்பது மிகவும் ஆபத்தானது. அனுமானங்கள், சந்தேகங்கள், மறைமுகத் தகவல்கள் அடிப்படையில் ஒரு பத்திரிகையில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்களும் செய்திகளும் 'உண்மைகள்' அல்ல. ஒரு பிரச்சினையின் மையத்தை நெருங்குவதற்கான பல்வேறு நிலைகளிலான பாதைகள் அவை. அவை ஏற்கப்படவோ மறுக்கபடவோ செய்யலாம். ஆனால் அவற்றை அழிக்க முயற்சிப்பது இந்த அரசிற்கு கருத்துக்கள் தொடர்பாக இருக்கும் பதட்டத்தையே காட்டுகிறது.
இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் சம்பந்தமான பிரச்சினைகளில் எடுக்கப்படும் நிலைப்பாடுகள் பல சமயங்களில் பெரிதும் சுயசார்புகளை மையமாகக்கொண்டிருக்கின்றன. இவை ஒருபிரச்சினையின் ஆதாரமான கேள்விகளை பலவீனமடையச் செய்துவிடுகின்றன. பாதிக்கப்படும் நபர்களின் பின்புலங்கள் முரண்பாடுகளைக் காட்டிலும் முக்கியமானவை ஒரு சமூகத்தில் அரசு எந்திரத்தின் அதிகாரத்திற்கும் சிவில் உரிமைளுக்கும் இடையிலான பிரச்சினைகள். இந்த உரிமைகளை நாம் ஒருமுறை பாதுகாக்கத் தவறினால் அவற்றை மீண்டும் அடைவது கடினம். இங்கு பத்திரிகையாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் பல சயங்களில் இரட்டை நிலைப்பாடுகளே இருக்கின்றன. ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சினைகளில் குறைந்த பட்ச அளவில்கூட பொதுக் கருத்துக்கள் எட்டப்படுவதில்லை.
சுதந்திரம் பிளவுபடாதது.
மனுஷ்ய புத்திரன்
உயிர்மை மார்ச் 2005 தலையங்கம்
uyirmmai@gmail.com
Monday, February 14, 2005
காதல் கவிதைகள்:8 மனுஷ்ய புத்திரன்
காதலர் தினத்தை ஒட்டி நான் திட்டமிட்டபடி விரிவான அளவில் கவிதைகளை உள்ளிடமுடியாதபடி பல்வேறு வேலைகள் வந்து குறுக்கிட்டுவிட்டன. ஆனாலும் சில கவிதைகளையேனும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடிந்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி. பி.கே. சிவக்குமார் போன்ற நண்பர்கள் சில கவிதைகள் தொடர்பாக எழுதியுள்ள ஆழமான குறிப்புகள் மிகவும் மகிழ்ச்சி தருகின்றன. கவிதைகளையோ பிற இலக்கியப் பிரதிகளையோ முன்னிட்டு இத்தகைய பேச்சுக்களை உயிர்மை வலைப்பதிவில் உருவாக்க பேராவல் எழுகிறது. திரு நாராயணன் இப்பதிவை தொடர்ந்து தன்னுடைய வலைப்பதிவில் மேலும் சில கவிதைகளை இட்டிருந்தார்.
மொத்தத்தில் இது மிகவும் மகிழ்ச்சி தரும் அனுபவம்.
எனது இரு கவிதைகளைச் சொல்லி இந்தக் காதலர் தினப் பேச்சுக்களை நிறைவு செய்யலாம். காதல்களைத் தொடர்ந்தபடி...
இழந்த காதல்
நின்று சலித்த என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது
மரங்கள் நடப்பது சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்
ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்
அந்த இடம்
போகும்போது
உன்னுடன் கொண்டு
வந்த எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்கிறாய்
ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது
நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்
மொத்தத்தில் இது மிகவும் மகிழ்ச்சி தரும் அனுபவம்.
எனது இரு கவிதைகளைச் சொல்லி இந்தக் காதலர் தினப் பேச்சுக்களை நிறைவு செய்யலாம். காதல்களைத் தொடர்ந்தபடி...
இழந்த காதல்
நின்று சலித்த என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது
மரங்கள் நடப்பது சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்
ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்
அந்த இடம்
போகும்போது
உன்னுடன் கொண்டு
வந்த எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்கிறாய்
ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது
நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்
காதல் கவிதைகள்:7 மாலதி மைத்ரி
காதல் கடிதம்
ஆண்டவன் துணை
அன்புள்ள பானுவுக்கு மாமா எழுதிக் கொள்வது
பணம் அனுப்பியது கிடைத்ததா
ஊதாரித்தனமாக செலவு செய்யாதே
கணக்கு எழுதிவை
தின்னு அழிக்காதே
வெள்ளை பூண்டு வெங்காயம்
மசாலா கறிசேத்துக்காதே
எல்லாம் உன் நன்மைக்குத்தான்
சினிமா கடைத் தெருன்னு சுத்தாதே
கீழ்வீட்டு அக்கா துணையுடன் வெளியே போவனும்
படியை விட்டு இறங்கும்போது
முந்தானையை இழுத்து போத்திக்கனும்
உடம்பைக் கொற நீ கேட்ட வளையலை
அடுத்த மாதம் கொடுத்து அனுப்புகிறேன்
என் மகள் மகாலஷ்மி அமெரிக்கா போவதற்கு
ஏற்பாடும் பணமும் தயார் செஞ்சிக்கிட்டு
கூடவே கொஞ்சம்கூலி விசா பொறுக்கினு வரேன்
அவள் ஊருக்குப் போயிட்டால்
இங்கேயே செட்டில் ஆகிடலாம்
எனக்கும் 55 ஆவப்போகிறது
இது வரைக்கும் உன் அக்காவுக்கு
துரோகம் செஞ்சது கெடையாது
ஒரு கொறையும் உனக்கு வைக்க மாட்டேன்
வீட்டுவேலைக்கு விசாகேட்டு
என் வாசல் மெதிச்ச ராத்திரி
நான் தூங்கவேயில்லை
யோசிச்சிதான் முடிவு பண்ணினேன்
ஐயோ பச்ச குழந்தை
அங்கபோய் எத்தனை கைமாறுதோ
நம்ம கையோடயே இருந்துட்டு
போகட்டுமேன்னு பிச்சைபோட்டுருக்கேன்
வரமா நெனச்சு காப்பாத்திக்கோ
எல்லாம் உன் நன்மைக்குத்தான் சொல்றேன்
ஒரு ஆறுமாசம் பொறுத்துக்கோ
பல்லாயிரம் மைலுக்கு அப்பால இருக்கன்னு
ஏதாவது துரோகம் பண்ண நெனச்ச
தேவடியா நாயே
ஆள்வச்சி தீத்துக் கட்டிடுவேன் ஜாக்கிரதை
பதில் எழுதவும்
அன்புடன்
மாமா
ஆண்டவன் துணை
அன்புள்ள பானுவுக்கு மாமா எழுதிக் கொள்வது
பணம் அனுப்பியது கிடைத்ததா
ஊதாரித்தனமாக செலவு செய்யாதே
கணக்கு எழுதிவை
தின்னு அழிக்காதே
வெள்ளை பூண்டு வெங்காயம்
மசாலா கறிசேத்துக்காதே
எல்லாம் உன் நன்மைக்குத்தான்
சினிமா கடைத் தெருன்னு சுத்தாதே
கீழ்வீட்டு அக்கா துணையுடன் வெளியே போவனும்
படியை விட்டு இறங்கும்போது
முந்தானையை இழுத்து போத்திக்கனும்
உடம்பைக் கொற நீ கேட்ட வளையலை
அடுத்த மாதம் கொடுத்து அனுப்புகிறேன்
என் மகள் மகாலஷ்மி அமெரிக்கா போவதற்கு
ஏற்பாடும் பணமும் தயார் செஞ்சிக்கிட்டு
கூடவே கொஞ்சம்கூலி விசா பொறுக்கினு வரேன்
அவள் ஊருக்குப் போயிட்டால்
இங்கேயே செட்டில் ஆகிடலாம்
எனக்கும் 55 ஆவப்போகிறது
இது வரைக்கும் உன் அக்காவுக்கு
துரோகம் செஞ்சது கெடையாது
ஒரு கொறையும் உனக்கு வைக்க மாட்டேன்
வீட்டுவேலைக்கு விசாகேட்டு
என் வாசல் மெதிச்ச ராத்திரி
நான் தூங்கவேயில்லை
யோசிச்சிதான் முடிவு பண்ணினேன்
ஐயோ பச்ச குழந்தை
அங்கபோய் எத்தனை கைமாறுதோ
நம்ம கையோடயே இருந்துட்டு
போகட்டுமேன்னு பிச்சைபோட்டுருக்கேன்
வரமா நெனச்சு காப்பாத்திக்கோ
எல்லாம் உன் நன்மைக்குத்தான் சொல்றேன்
ஒரு ஆறுமாசம் பொறுத்துக்கோ
பல்லாயிரம் மைலுக்கு அப்பால இருக்கன்னு
ஏதாவது துரோகம் பண்ண நெனச்ச
தேவடியா நாயே
ஆள்வச்சி தீத்துக் கட்டிடுவேன் ஜாக்கிரதை
பதில் எழுதவும்
அன்புடன்
மாமா
Sunday, February 13, 2005
காதல் கவிதைகள்:6 ஞானக்கூத்தன்
பவழமல்லி
கதை கேட்கப் போய் விடுவாள் அம்மா. மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா. சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்
பூக்களெல்லாம் மலர்ந் தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழ மல்லி
கதை முடிந்து தாய் திரும்பும் வேளை மட்டும்
தெருப்படியில் முழு நிலவில் அந்த நேரத்
தனிமையில் என் நினைப்புத் தோன்றுமோடி?
கதை கேட்கப் போய் விடுவாள் அம்மா. மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா. சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்
பூக்களெல்லாம் மலர்ந் தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழ மல்லி
கதை முடிந்து தாய் திரும்பும் வேளை மட்டும்
தெருப்படியில் முழு நிலவில் அந்த நேரத்
தனிமையில் என் நினைப்புத் தோன்றுமோடி?
காதல் கவிதைள்:5 கல்யாண்ஜி
பலிச்சோறு படைப்பது போலிருக்கிறது
ஆவி பறக்கிற உன் காமம்.
பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிற
வக்கிரம் அனைத்தையும்
உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது.
காணாமல்போன சீப்பைமுன் வைத்து
நிலைக் கண்ணாடி உடைக்கிற என்கோபத்தை
உறிஞ்சிக்கொள்கிறது உன் ஆழ்ந்த முகம்.
மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்கு
நீர் வார்க்கிறது உன் முத்தம்.
விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை
என் வாயோரங்களிலிருந்து துடைத்துக்
கொண்டிருக்கிறது உன் வெளிறிய விரல்கள்.
எஞ்சிய என் கருத்த கசடுகளின்
ரகசிய அம்பு எய்யப்படக்
காத்திருக்கிறது உன் உந்திச்சுழி.
குருவையும் கடவுளையும் பிரீதி செய்ததில்
செம்பருத்தி உருண்டுவிழுகிறது உன் யோனியில்.
அப்பழுக்கற்றதாக இருக்கிறதாகச்
சொல்கிறார்கள்.
வீட்டுக்கு வெளியில்
நான் விடுகின்ற மூச்சு.
ஆவி பறக்கிற உன் காமம்.
பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிற
வக்கிரம் அனைத்தையும்
உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது.
காணாமல்போன சீப்பைமுன் வைத்து
நிலைக் கண்ணாடி உடைக்கிற என்கோபத்தை
உறிஞ்சிக்கொள்கிறது உன் ஆழ்ந்த முகம்.
மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்கு
நீர் வார்க்கிறது உன் முத்தம்.
விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை
என் வாயோரங்களிலிருந்து துடைத்துக்
கொண்டிருக்கிறது உன் வெளிறிய விரல்கள்.
எஞ்சிய என் கருத்த கசடுகளின்
ரகசிய அம்பு எய்யப்படக்
காத்திருக்கிறது உன் உந்திச்சுழி.
குருவையும் கடவுளையும் பிரீதி செய்ததில்
செம்பருத்தி உருண்டுவிழுகிறது உன் யோனியில்.
அப்பழுக்கற்றதாக இருக்கிறதாகச்
சொல்கிறார்கள்.
வீட்டுக்கு வெளியில்
நான் விடுகின்ற மூச்சு.
காதல் கவிதைகள்:4 நகுலன்
நான்
வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
''யார்''
என்று கேட்டேன்
''நான் தான்
சுசீலா
கதவைத் திற "என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?
நான்(2)
நேற்றுப்
பிற்பகல்
4:30சுசீலா வந்திருந்தாள்
கறுப்புப் புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதேவிந்தைப் புன்முறுவல்
உன் கண்காண
வந்திருக்கிறேன்போதுமா
என்று சொல்லிவிட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன.
வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
''யார்''
என்று கேட்டேன்
''நான் தான்
சுசீலா
கதவைத் திற "என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?
நான்(2)
நேற்றுப்
பிற்பகல்
4:30சுசீலா வந்திருந்தாள்
கறுப்புப் புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதேவிந்தைப் புன்முறுவல்
உன் கண்காண
வந்திருக்கிறேன்போதுமா
என்று சொல்லிவிட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன.
Subscribe to:
Posts (Atom)