Saturday, November 26, 2005

சுந்தர ராமசாமி நினைவரங்கு : சொல்லின் கால் தடங்கள்

Image hosted by Photobucket.com

நாள்:27.11.2005 காலை 10 மணி முதல் ஒரு மணிவரை
இடம்:தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகம்
அண்ணா சாலை, (ஆனந்த் திரையரங்கம் அருகில்)
சென்னை

நூல் வெளியீடு

ஜெயமோகனின்
சுந்தரராமசாமி:நினைவின் நதியில்

வெளியிடுபவர்:ஜெயகாந்தன்
பெற்றுக் கொள்பவர்:பாலு மகேந்திரா

சிறப்புரைகள்:
கல்பற்றா நாராயணன்
ந.முத்துசாமி
எம்.யுவன்
கே.எம்.ஆதிமூலம்
நாஞ்சில் நாடன்
பிரபஞ்சன்
ஜெயமோகன்
சி.மகேந்திரன்
ஒருங்கிணைப்பு: மனுஷ்ய புத்திரன்.



உயிர்மை உங்களை அன்புடன் அழைக்கிறது.

தொடர்புகளுக்கு:


email:uyirmmai@gmail.com
phone:044-24993448
mobile:9444366704

Monday, October 31, 2005

சன் டிவி பற்றிய குறிப்பும் சில எதிர்வினைகளும்

சென்னை மழை பற்றிய என்னுடைய முந்தைய பதிவு தொடர்பாக ஊடக வன்முறை குறித்த தங்கள் தீவிரமான பார்வைகளை முன்வைத்த நண்பர்களுக்கு நன்றி. அதில் இரண்டு எதிர்வினைகள் பற்றி இங்கு குறிப்பிடவிரும்புகிறேன்.

சத்யம் என்ற பெயரில் இடப்பட்ட எதிர்வினையில் நான் என்னைவிட வசதியான ஊடகத்தை பார்த்து வயிற்றெரிச்சலில் இப்படி எழுதிருக்கிறேன் என்கிறது. இன்னொரு பெயரில்லாத எதிர்வினை பெண்களுக்கு ஆபாச sms அனுப்புவதைவிட்டு சன் டிவிக்காக கண்ணீர் விடலாம் என்கிறது. தமிழ் வலைபதிவுகளிஎழுதுபவர்களின் தார்மீகமின்மைகள் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இதுபோன்ற அவதூறுகளின் நோக்கம்:

1. ஒரு விவாதத்தை முறித்து திசை திருப்புவது.
2.அவமானப்படுத்தி குரூர திருப்தி அடைவது.
3. அசலாக ஒரு வாக்கியத்தையோ அபிப்ராயத்தையோ உருவாக்க முடியாமல் பிறரது அபிப்ராயங்களின் நிழலில் சுய மைதுனம் செய்வது.
4. இருட்டிலிருந்து கல்லெறிந்து அபிப்ராயங்களை உருவாக்குபவர்களை துரத்துவது.

இதுபோன்ற ஆபாசங்களை வலைப்பதிவிலிருந்து நீக்கிவிடுவது சுலபம். ஆனால் அதை நான் செய்ய மாட்டேன். ஒரு சமூகத்தில் ஆபாசமும் வக்கிரமும் பதிவு செய்யப்படவேண்டும். அப்போதுதான் நம்மால் அதை எதிர்கொள்ள முடியும். நோயின் அறிகுறிகள் சுதந்திரமாக வெளிவரவேண்டும். சமூகவியலிலும் உளவியலிலும் ஆர்வம்கொண்ட எழுத்தாளன் என்ற வகையில் இதுபோன்ற பதிவுகள் எனக்கு உற்சாகம் அளிக்கின்றன. இவற்றை எழுதும் நபர்கள் இன்னும் கூட தங்களது மனோவிகாரத்தையும் கீழ்மையையும் விரிவாக பதிவு செய்வது அவசியம். வலைப்பதிவுகளின் உபயோகமும் கருத்து சுதந்திரத்தின் பயன்பாடும் தமிழ் வலைப்பதிவுகளில் முற்றிலும் புதிய தளத்தை எட்டியிருப்பதை மகிழ்ச்சியுடன் அங்கீகரிக்கிறேன்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Thursday, October 27, 2005

சென்னை மழையில் சன் டிவியின் உளவியல் வன்முறை

சென்னையில் பேய் மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. பல்வேறு துறையினராலும் நாசமாக்கபட்ட சாலைகளில் தண்ணீர் வடிய வசதியின்றி ஜனங்கள் கடும் இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர். வீடுகளில் தண்ணீர் வந்தது பற்றி நண்பர்கள் தொலைபேசியில் தெரிவித்துவருகின்றனர். சில பகுதிகளில் முழங்கால்வரை தண்ணீர் ஓடுகிறது என்றும் தெரிவித்தனர். காலையில் ஒன்பது மணியிலிருந்து மின்சாரம் நிறுத்தபட்டு மாலை நான்கு மணிக்கு மீண்டும் வந்தது. அவ்வளவுதான் பிடித்தது சனியன். சன் டிவியில் சென்னையே பிரளயத்தில் மூழ்கிக் கொண்டிருப்பதாக அலறல். நேரடி ஒளிபரப்பில் அதன் செய்தியாளர்; அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல் மக்கள் நடுங்குவதாக தெரிவிக்கிறார். அப்புறம் மும்பை மழையை விடக் கடுமையாக மழை பெய்யப் போகிறது என்று பயமுறுத்துகிறார். வானிலை அதிகாரியின் பேட்டியில் அப்படி எதுவும் இல்லை. கார்பரேஷன் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்களா என்று ஸ்டுடியோவிலிருந்து தொகுப்பாளர் கேட்கிறார். நடவடிக்கை எடுத்தார்கள், ஆனால் எந்த அளவுக்கு எடுத்தார்கள் என்று தெரியவில்லை என ஆரம்பித்து உடனடியாக மக்களின் அவதியை ஆளும் கட்சிக்கு எதிராக ஆதாயமாக்கிக் கொள்ளும் முயற்சி...

இது போன்ற நெருக்கடியான சந்தர்பங்களில் மக்களுக்கு நம்பிக்கையும் வழிகாட்டுதலும் தேவை. ஆனால் செய்திகள் மிகைப்படுத்தப்படுவது மட்டுமல்ல அவை பீதி ஊட்டும் வகையில் திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன. வதந்திகள் பெருகுகின்றன.

சுனாமியின்போதும் இதுதான் நடந்தது. ஊடகங்களின் வன்முறை நமக்குப் புதிதல்ல. ஆனால் எப்போதும் அவை மக்களுக்கு மேல் பிணந்தின்னிக் கழுகாக பறந்துகொண்டிருக்க வேண்டுமா என்ன?

நாளை காலை புயல் கரையை கடக்கும் என்கிறார்கள். நாம் சன் டிவியை எப்படி கடப்பது என்றுதான் தெரியவில்லை.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Sunday, October 16, 2005

சுராவின் மறைவும் இருப்பும்

(சுரா மறைந்த நான்கு மணிநேரத்திற்குப் பிறகு அதைபற்றிய முதல் பதிவினை உயிர்மை பதிவினில் அளித்தேன். அது தென்பட்டு மறைந்துபோனதாக திரு.பத்ரி தனது வலைப்பதிவினில் குறிப்பிட்ட பிறகே எனக்கு அது காணமல் போனது தெரியும். அது இப்போது அவ்வளவு முக்கியமல்ல. செய்தி அறிந்த முதல் கணத்தில் தோன்றிய குழப்பமான நடுங்கும் சொற்களை நான் மறுபடி இட விரும்பவில்லை. ஒரு வார இதழுகாக அளித்த அஞ்சலிக் குறிப்பினை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்)

சுராவின் மறைவு ஒரு மரணத்தைபற்றிய எல்லா சம்பிராதயமான சொற்களையும் கலைத்துவிடகூடியதாக இருக்கிறது. ஒரு எழுத்தாளராகவும் ஆசானாகவும் நண்பராகவும் பத்தாண்டுகளுக்கும் மேலாக சுந்தர ராமசாமியிடம் கொண்டிருந்த ஆழமான உறவின் மீது இந்த மரணம் ஒரு கொடுங்கனவைப்போல படர்ந்துகொண்டிருக்கிறது. அவை வெறும் நினைவுகளோ ஒரு ஆளுமையைப் பற்றிய பதிவுகளோ அல்ல. சுந்தரராமசாமியின் வழியாக உருவாகிவந்த ஒரு தலைமுறைப் படைபாளிகளில் ஒருவன் என்ற முறையில் இந்த மரணத்தை எப்படி நிராகரிப்பது, ஒப்புக் கொள்ள மறுப்பது என்பதுதான் என்னுடைய பிரச்சினை.

இளம்பிராயத்தில் ஜே.ஜே சிலகுறிப்புகளைப் படித்து மனப் பிறழ்வுக்கு ஆளானவர்களில் நானும் ஒருவன். ஜே.ஜே உருவாக்கிய நிம்மதியின்மைகளும் கேள்விகளும் அன்றாட வாழ்வில் என்னுடைய சகஜமான இருப்பை நிலை குலைய வைத்தன. அந்த நிம்மதியின்மையோடு சுராவை போய்பார்த்தேன். இளைஞர்களிடம் அவர் பாராட்டிய தோழமை உணர்வு மகத்தானது. சொல்வதைக் காட்டிலும் அவர் கேட்பவராக இருந்தார். அறிவுறுத்துவதைக் காட்டிலும் புரிந்துகொள்ள விரும்புபவராக இருந்தார். எப்போதும் இது அவருடன் ஒரு இணக்கத்தையும் நம்மைப் பற்றிய பதட்டத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது.

அவர் தொடங்கி இடைநிறுத்திய காலச்சுவடு இதழ் மீண்டும் தொடங்கப்பட்டபோது அதன் ஆசிரியர் குழுவில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இது சுமார் பத்தாண்டுகாலம் சுராவுடன் தீவிரமான பரிமாற்றங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்தது. இந்தச் சந்தர்ப்பம் எனது மொழியை சிந்தனையை மனோபாவத்தை கடுமையாக பாதித்தது. நான் அவருடைய ஆளுமையால் தீவிரமாக ஆக்கரமிக்கப்படுபவனாகவும் எனக்குள் அதை சிலசமயம் எதிர்த்துப் போராடுபவனாகவும் இருந்திருக்கிறேன்.


சுமார் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சுரா ஒரு இயக்கமாக இருந்தார். தமிழ் வாழ்வில் சிறுமைகள் குறித்த கண்டங்களும் கேள்விகளும் அவரது எழுத்துக்களின் அடிப்படை நீரோட்டமாக இருந்திருக்கிறது. இந்தக் கேள்விகளை அவர் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. பல எழுத்தாளர்கள் தங்கள் வாழ்வில் செய்துகொள்ள நேர்ந்த சமரசங்கள் எதையும் சுரா செய்துகொள்ள நேரவில்லை.

தமிழில் மிகவும் அதிகமாக விமர்சிக்கப்பட்ட எழுத்தளாராக சுந்தர ராமசாமியைத்தான் குறிப்பிட முடியும். இலக்கியம் சார்ந்த காரணங்களைவிட இலக்கியம் அல்லாத காரணங்களுக்காவே அவர் பெரிதும் விமர்சிக்கப்பட்டிருக்கிரார். எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. ஆனால் சுரா தனது அரசியலையும் நம்பிக்கைகளையும் தெளிவாக முன்வைத்தார். அதனாலே அவரை விமர்சிப்பவர்களுக்கான ஆயுதங்களை அவரே எப்போதும் வழங்கினார். ஆனால் அவருடைய எல்லா சிந்தனைகளும் செயல்பாடுகளும் ஒரு வெட்ட வெளியில் மூட்டப்பட்ட நெருப்பைப் போல சில சமயம் புகைந்துகொண்டும் சில சமயம் எரிந்துகொண்டும் இருந்தன.

சுரா தமிழில் மூன்று தலைமுறை படைப்பாளிகளை பாதித்திருக்கிறார். அவர் இலக்கியத்தில் உருவாகிய சில மதிப்பிடுகளும் சமூகத்தைப் பற்றிய விமர்சனங்களும் பல்வேறு விவாதங்களை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அவரது கேள்விகள் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும். இந்த கேள்விகள் சில சமயங்களில் சுராவைப் பற்றிய கேள்விகளாகவும் பல சமயங்களில் நம்மைப் பற்றிய கேளிவிகளாகவும் இருப்பது தவிர்க்க இயலாது.

சுரா ஒரு யுகத்தின் அடையாளம். அந்த யுகம் மறைந்துகொண்டிருக்கிறது. அது தன்னுடன் சுராவையும் எடுத்துசெல்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவரது மரணம் சந்திப்பதற்கு கடினமானதாகவும் ஒரு உறைபனியைப்போல சருமத்தை துளைப்பதாகவும் இருக்கிறது.

சுராவின் மரணம் சட்டென ஒரு இடைவெளியை உருவாக்கிவிட்டது. அதைக் கடப்பது அவ்வளவு எளிதாக இல்லை.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Sunday, August 07, 2005

நட்பின் ரகசிய வழி

நண்பர்கள் தினத்தை ஒட்டி இன்றைய தினமணியில் எனது கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. பின்வரும் இணைப்பில் அதைக் காணலாம். நண்பர்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

http://www.dinamani.com/sunday/sundayitems.asp?ID=DS420050805082259&Title=Sunday+%2D+Column&lTitle=%F9R%F4PoLh%D3%FBW

அன்புடன்
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Sunday, June 19, 2005

புதிய கவிதைகள்-11

Image hosted by Photobucket.com

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட
ஒரு மழை நாளில்

குமாஸ்தாக்கள் கோப்புகளிலிருந்து
சற்றே நிமிர்ந்து உட்காருகிறார்கள்

நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு
சற்றே மிதமான தண்டணைகளை
வழங்குகிறார்கள்

கணவர்கள் மனைவிகளுக்கு அளிக்கும்
சுதந்திரத்தைக் கண்காணிக்க கொஞ்சம் மறந்துபோகிறார்கள்.

ஒரு கண்டன ஊர்வலம்
சட்டென மகிழ்ச்சியான ஒரு மன நிலைக்கு மாறுகிறது

செய்யப்படாத வேலைகள் பற்றி
தொழிலாளிகள் பயம் குறைந்து காணப்படுகிறார்கள்

வேலை கொடுத்துக்கொண்டிருப்பதை
மறந்து முதலாளிகளும் கொஞ்சம் மழையை வேடிக்கை பார்க்கிறார்கள்

பெட்ரோல் பங்கில் எனக்கு பின்னால் காத்திருப்பவன்
இன்று எந்த விரோதமும் இல்லாமல் இருக்கிறான்

வகுப்பறைகளில் குழந்தைகள்
ஆசிரியர்களைப் பற்றிய பயங்கரம் நீங்கி
வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

நண்பர்கள்
நண்பர்களைப் போலவே காட்சியளிக்கிறார்கள்.

எல்லா இடத்திலும் ஈரம் பரவிக்கொண்டிருந்த
ஒரு மழை நாளில்
நான் என் காதலைச் சொன்னபோது
நீ அதை
மறுக்கவும் இல்லை
ஏற்கவும் இல்லை

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Tuesday, April 12, 2005

புதிய கவிதைகள்-10

Image hosted by Photobucket.com


மழை வரும்போது
வந்து சேரும் இந்தத் துக்கம்

ஒரு துக்கத்தைப் போலவே
இல்லை அது

துக்கத்தில் தழுவிக்
கிடக்கும் பெண்

ஒரு பெண் போலவே
இல்லை நீ

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Friday, April 08, 2005

புதிய கவிதைகள்-9

Image hosted by Photobucket.com


''அப்பா நீங்கள்
வீட்டிற்குப் போங்கள்
நான் எப்போதாவது வருவேன்"

மகளின்
உலர்ந்த கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்

கைப்பையை திறந்து திறந்து மூடும்
கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்

தனக்குள் முணுமுணுக்கும் உதடுகளின்
தனிமையை பார்த்துக் கொண்டிருந்தான்

கண்ணீரேயில்லாத
பிரிவுகளை பார்த்துக்கொண்டிருந்தான்

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Thursday, April 07, 2005

புதிய கவிதைகள்-8

Image hosted by Photobucket.com

இறுக மூடிய கைகளை
அவ்வளவு பலவந்தமாக பிரித்துப் பார்த்தீர்கள்

எதற்காகவோ பூட்டி வைத்திருந்த அறையை
கள்ளச் சாவியிட்டு திறந்தீர்கள்

வழியில் கண்டெடுத்த ஏவல் பொம்மையை
வீடுவரை கொண்டு வந்தீர்கள்

ரத்த சாட்சிகளின் மெளனத்தை
வற்புறுத்திக் கலைத்தீர்கள்

ஒரு துரோகத்தின் கதையை
அதன் முடிவுக்கு பயப்படாமல் கேட்கத் தொடங்கினீர்கள்

உங்களுக்கு பைத்தியம் பிடித்த
ஒரு பெளர்ணமியில்
எல்லா உண்மைகளையும் தெரிந்துகொண்டீர்கள்

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Wednesday, April 06, 2005

புதிய கவிதைகள்-7

Image hosted by Photobucket.com

பிசாசுகளின் கவிஞன்
பிசாசுகளைப் போலவே நேசிக்கிறான்

அவன் பற்றுகிற உடல்
அவனது உடலாகிறது

எப்போதும் பயத்திற்குள்
அசைகிறது அவன் வேட்கையின் சாயைகள்

அவனது மர்மத்தின் முடிச்சுகளால்
இறுகிக்கொண்டிருக்கிறது உன் குரல்வளை

எவ்வளவு தூரம் கூடவே வந்தாலும்
யாரும் கவனிப்பதில்லை அவனது உடனிருப்பை

அதிகரித்துக்கொண்டிருக்கும்
உன் படுக்கையறையின் வெப்பம்
எந்த மூச்சிலிருந்து கிளைக்கிறதென
நீ அறிய மாட்டாய்

பிசாசுகளின் கவிஞன்
பிசாசுகளைப் போலவே
எல்லா இடத்திலிருந்தும் வெளியேற்றப்படுகிறான்

பிசாசுகளின் கவிஞனுக்கு
பிசாசுகளைவிடவும்
அதிகம் பசிக்கிறது.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

புதிய கவிதைகள்-6

Image hosted by Photobucket.com


எல்லோரும்
யாருடனாவது இருந்துகொண்டிருக்கிறார்கள்

தொடுகிற ஒவ்வொரு கையிலிருந்தும்
ஒட்டுகிறது யாரோ ஒருவரின் வியர்வை

எந்தப் பாதையிலும் பின்தொடராமலில்லை
ஏதோ ஒரு காலடிச் சத்தம்

எல்லா இணைப்புகளும்
உபயோகத்தில் இருக்கும்
இந்தத் தொலைபேசியில்
நான் உன்னை வந்தடையும்போது
ஒரு பருவம் கழிந்திருக்கும்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Tuesday, April 05, 2005

புதிய கவிதைகள்-5

Image hosted by Photobucket.com


ஒரு மலரைப் பறிப்பது
போல்பறித்தாலும் சரி

ஒரு மிருகத்தை வெல்வதுபோல்
வென்றாலும் சரி

ஒன்றுபோலவே இருக்கிறது
ஒரு அன்பைத் தொடர்வது

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

புதிய கவிதைகள்-4

Image hosted by Photobucket.com


நடக்கலாம்
கால் வலிக்கும்போது கொஞ்சம் உட்காரலாம்
பேசலாம்
வெறுமை சூழும்போது மெளனமாக இருக்கலாம்
கைகளை பற்றிக் கொள்ளலாம்
பயம்வரும்போது கைகளை விலக்கிக் கொள்ளலாம்
ஒரு ஒரு முறை முத்தமிடலாம்
முத்தத்தைப் பற்றி பேச்சு வந்துவிடாமல்
வேறு ஏதாவது பேசலாம்

அவரவர்
வீடு நோக்கிப் போகலாம்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Monday, April 04, 2005

புதிய கவிதைகள்-3

Image hosted by Photobucket.com

உன் கண்கள்
இங்கே எதையுமே
பார்ப்பதில்லை

ஒழுங்குகளை
ரகசியங்களை
பலவீனங்களை
எப்போதும் கசிந்துகொண்டிருக்கும்
காயங்களை

ஒன்றையும்
அவை உற்றுப் பார்ப்பதில்லை.

உன் கண்கள்
கண்களை மட்டுமேசந்திக்கின்றன.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

புதிய கவிதைகள்-2

நீ வரப்போவதில்லை
என்ற போதும்
இன்னொரு கோப்பையில்
கொஞ்சம் மதுவை ஊற்றுகிறேன்

எல்லாத் திரைச் சீலைகளையும்
இழுத்துவிட்ட பிறகும்
எப்படியோ கொஞ்சம்
உள்ளே வந்துவிடுகிறது
ஒருபோதும் எதிர்கொள்ள விரும்பாத
அந்தியின் நிழல்கள்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Sunday, April 03, 2005

புதிய கவிதைகள்-1

நம்முடைய இரவுகள்
தேம்புகின்றன

நம்முடைய பகல்கள்
ஆவியாகிவிடுகின்றன

நம்முடைய இந்தக் காதல்
கடலுக்கடியில்
ஒரு புராதனக் கோயிலாக
மிதந்து கொண்டிருக்கிறது.

மனுஷ்ய புத்திரன்

Tuesday, March 22, 2005

சவக் கிடங்கிற்குச் செல்லும் விடுதலை ரயில்

ஷோபாசக்தியின் 'ம்'

மனுஷ்ய புத்திரன்


வன்முறை தோய்ந்த சமகால அரசியல் சமூக வரலாற்றை எழுதுவதென்பது ஒரு கலைஞனுக்கு ஏற்படுத்தும் சவால்கள் கடுமையானவை. அரசியல் நிலைப்பாடுகளும் அறவியல் சார்ந்த ஆதாரமான கேள்விகளும் பல சமயங்களில் எதிர் நிலைகளாகிவிடுகின்றன. ஒருவரது அரசியல் நம்பிக்கைகள், நிலைபாடுகள் குறித்த கேள்விகள் தீவிரமடையும்போது உண்மைகளைவிட நிலைப்பாடுகளும் அறத்தைவிட கொள்கைகளும் முக்கியமடைந்துவிடுகின்றன. ஆனால் ஒரு கலைஞன் அரசியல் ரீதியாக நியாப்படுத்தப்படும் கொலைகளின் பின்னிருக்கும் ரத்தக் கவுச்சியையும் மறைக்கப்படும் வாதைகளின் கூக்குரலையும் கேட்கவேண்டியவனாகிவிடுகிறான். அவ்வாறு கேட்கும்போது அவனது நம்பிக்கைகள் முற்றாகக் கலைக்கப்பட்டு வாழுதலின் அர்த்தத்தையும் நீதியையும் சிதைவுகளின் ஊடே தேடிச் செல்கிறான். அவ்வாறு தேடிச் செல்லும் கதையே ஷோபா சக்தியின் 'ம்'

1980க்ளுக்குப் பிந்தைய ஈழத்தின் அரசியல் சரித்திரத்தை சொல்லும் இக்கதை உண்மையில் ஒரு தேசத்தின் வரலாற்றையோ, சித்திரவதைகளின் கதையையோ, அல்லது இதுவரை சொல்லப்படாத சம்பவங்களையோ சொல்லப்பட்டதைவிட அதிகமான குரூரங்களையோ சொல்லிவிடவில்லை. நேசகுமாரனுக்கு நடந்தவை அனைத்தும் பல்வேறு வழிகளில் நம்மால் கேட்கப்பட்டுவிட்டன. ஆனால் இதுவரை கேட்ககப்படாதது இந்த கதைக்குள் வாழும் ஒரு மனிதனின் தன்னழிவும் மன முறிவும்தான். இந்தத் தன்னழிவு வரலாற்றில் பதிவு செய்ய முடியாதது. வரலாற்றை உருவாக்கும் மாமனிதர்களின் கனவுகளில், தியாகங்களுக்கான அறைகூவல்களில்., மாபெரும் விடுதலை இலட்சியங்களில் இந்தத் தன்னழிவிற்கு இடம் கிடையாது. அவை பைத்தியக்கார்களின் குறிப்பேடுகளில் கிறுக்கபட்ட ரகசியக் குறிப்புகளாகிவிடுகின்றன. இந்த ரகசியக் குறிப்புகள் வாழ்க்கையின் மீதான எல்லாக் கற்பிதங்களையும் எள்ளி நகையாடுகின்றன. சிதறடிக்கப்பட்ட மனிதன் என்ற கற்பிதத்தின் சிதிலங்களிலிருந்துதான் ஷோபாசக்தின் இந்த நாவல் தொகுக்கப்படுகிறது. போராட்டம், விடுதலை, தியாகம், புனிதமரணங்கள் என அலங்கரிக்கப்பட்ட மகத்தான பலிபீடங்களை இக்கதை தகர்த்து விடுகிறது.

ஷோபாசக்தி வன்முறையின் எல்லாப் பக்கங்கங்களையும் திறந்து பார்க்கிறார். ஒடுக்குமுறைக்கும் விடுதலைக்குமிடையே வாழ்வின் ஒவ்வொரு மூலையையும் இந்த வன்முறை சூழ்ந்திருக்கிறது. 83 ஜூலைக் கலவரங்களின்போது வெலிகட சிறையில் நடந்த படுகொலை சம்பவங்கள் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் மிக முக்கியமான திட்டமிட்ட மனித அழிப்புகளில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஈழப் போராட்டத்தின் பெருங்கனலை மூட்டிய இந்த அழித்தொழிப்பைப் பற்றிய மிகத் துல்லியமான விபரங்களைத் தரும் ஷோபா சக்தி ஆஷ்ட்விச் முகாம்களைப் பற்றிய குறிப்புகளோடு ஒத்துப்போகும் இலங்கைச் சிறைச்சாலைகள் பற்றிய குறிப்புகளை விரிவாகப் பதிவு செய்கிறார். இதற்கு கொஞ்சமும் குறையாத போராளிகளின் வதை முகாம்கள் பற்றிய விவரணைகள் இணைகோடாக நாவலில் நீள்கிறது. இலங்கை அரசின் வதை முகாம்கள்... போராளிகளின் வதை முகாம்கள்... இவையிரண்டும் விடுதலை என்ற ரயிலின் தண்டவாளங்களாக மாறிவிடுகிறது. விடுதலை ரயிலின் வதை முகாம்களிலான பெட்டிகளில் நேசகுமாரன் தொடர்ந்து மாறி மாறிப் பயணம் செய்கிறான். இந்தப் பயணத்தின் வழிநெடுக சிதைக்கப்படும் உடல்களைத் தவிர வேறு காட்சிகளே இல்லை. ஒரு பிரமாண்டமான சவக் கிடங்கை நோக்கி விடுதலை ரயில் சென்றுகொண்டே இருக்கிறது.

நேசகுமாரன் ஏன் முக்கியமான சந்தர்பங்களில் தனது தோழர்களைக் காட்டிகொடுத்தான்? ஏன் தனது இலட்சியங்களைவிட்டுத் தப்பி ஓடினான்? ஏன் தனது சொந்த மகளின் கர்ப்பத்திற்கு காரணமாக இருந்தான் என்ற கேள்விகளுக்கான பதிலை ஒருவர் அரசியல் ரீதியாகவோ உளவியல்ரீதியாகவோ தேடிச் செல்லலாம். ஆனால் மனிதர்களைத் தூண்டுவது இலட்சியங்கள் மட்டுமல்ல, வாழ்வாசையும் ஆதாரமான இச்சைகளின் தர்க்கமற்ற இயல்புகளும்தான். இந்த இரண்டுக்குமான தீர்க்கமுடியாத முரண்கள்தான் நேசகுமாரனின் செயல்களை தீர்மானிக்கின்றன. குரூரமாக சிதைக்கப்படும் உடல்களிலிருந்தும் மனங்களிலிருந்தும் உருவாகும் புதிய மனிதனுக்கு, இந்த யுகத்தின் மனிதனுக்கு ஒரு குறியீடே நேசகுமாரன். இந்த மனிதன் வீழ்சியிலிருந்தும் அவநம்பிக்கையின் கசப்பிலிருந்தும் பிறப்பவன். சமூகத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் வெளியேற்றப்பட்டவன். தனக்கென நியாயங்கள் இல்லாதவன்.

ஆனால் நேசகுமாரனின் சிறைத் தோழனான பக்கிரி இலட்சியங்களைப் பாதுகாக்க தொடர்ந்து போராடுகிறான். அவன் எந்த இடத்திலும் நம்பிக்கை இழப்பதில்லை. சித்ரவதைகள் அவனை அச்சுறுத்துவதில்லை. அவனது ஆன்மாவை சிதைப்பதுமில்லை. அவன் கொல்லப்படும்வரை விடுதலையின் நெருப்பை அணையவிடாமல் பாதுகாத்துக்கொண்டே இருக்கிறான். பக்கிரியும் நேசகுமாரனும் உண்மையில் ஒரு கனவின் தவிர்க்க முடியாத இரண்டு பாதைகள்.

இந்த நாவலின் கட்டமைப்பு மிகவும் நுட்பமானது. இருபதந்தைந்து ஆண்டுகால ஈழத்து அரசியல் சமூக சரித்திரமும் அதை ஒட்டிய புலம்பெயர் வாழ்வியல்களமும் இந்த சிறிய நாவலில் அதன் எல்லா முரண்பாடுகளோடும் மிக உக்கிரமாக எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க தகவல்கள், குறிப்புகளால் சொல்லப்படும் இக்கதை அக் குறிப்புகள் அடுக்கப்படும், இடம் மாற்றப்படும்வித்தால் ஆழ்ந்த மனக்கசிவையும் அபத்த உணர்வையும் ஏற்படுத்துகிறது.

வாழ்வின் அபத்த முரண்கள் நாவல் முழுக்க குரூரமான அங்கதமாக உருக்கொள்கிறது. ஈழத்த்துப் படைப்புகளின் வெளிப்படும் உணர்ச்சிபூர்வமான சொல்லாடல்கள் எதுவும் ஷோபாசக்தியின் கதைகளில் இடம்பெறுவதில்லை. அன்னியனின் ஈரமற்ற மொழியில் தன்னுடைய உலகத்தைக் கட்டமைக்கிறார். செய்திக் குறிப்புகளை எழுதுபவனின் பாசாங்குடன் புனைவின் உக்கிரத்தை தீண்டுகிறது அவரது மொழி.

ஷோபாசக்தியின் கொரில்லா, தேசதுரோகி ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது வெளிவந்திருக்கும் 'ம்' அவரை ஈழத்து இலக்கியத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த நவீன தமிழ் இலக்கியத்திலுமே முதன்மையான அரசியல் புனைகதையாளனாக முன்னிருத்துகிறது. கருப்புப் பிரதிகள் இந்நாவலை வெகு நேர்த்தியாக பதிப்பித்திருக்கிறது.

'ம்' /நாவல்/ஆசிரியர்: ஷோபாசக்தி.வெளியீடு: கருப்புப் பிரதிகள்,45ஏ, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, சென்னை600 005பக்கம்:168, விலை:ரூ.80.

(இதன் சற்றே சுருக்கப்பட்ட வடிவம் இந்தியா டுடே மார்ச் 30, 2005 இதழில் வெளியாகியிருக்கிறது)

Saturday, March 19, 2005

ஜெயகாந்தனுக்கு ஞானபீடம்

ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் அறிவிக்கபட்டிருப்பதாக கவிஞர் சுகுமாரன் சற்றுமுன் தொலைபேசியில் அழைத்து தெரிவித்தார். தமிழுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் சந்தர்ப்பங்களில் அவமான உணர்ச்சி இன்றி பெருமித்தத்துடன் அவற்றை வரவேற்கும் சந்தர்ப்பங்கள் அபூர்வம். ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டிருப்பது அத்தகைய ஒரு சந்தர்ப்பம். தமிழ்க் கதையை தமிழ் வாழ்வின் இருண்ட நிலப்பரப்புகளை நோக்கிச் செலுத்திய ஒரு பெரிய இயக்கம் ஜெயகாந்தன். பிச்சைக்காரர்களும் வேசிகளும் பொறுக்கிகளும் குரூரமாக நசுக்கப்பட்டவர்களும் பிறழ்வுகொண்டவர்களும் ஜெயகாந்தனின் வழியே தமிழ் எழுத்துப் பரப்பிற்கு வந்து சேர்ந்தார்கள். நகர்ப்புற, அக்ரஹார எதார்த்ததிலிருந்து தமிழ் வாழ்க்கையின் பிரமாண்டத்தை நோக்கிய முதல் திறப்பு அவர்.

பாரதிக்குப்பின் தமிழ் எழுத்தாளன் குறித்த ஒரு கம்பீரமான படிமத்தை ஜெயகாந்தன் வழங்கினார். அவரைப்பற்றிய கடும் விமர்சனங்களை இன்று ஒருவர் எழுப்பலாம். ஆனால் அவர் ஒரு தலைமுறையின் பெரும் சக்தி. என் இளமைக்கால ஆளுமையை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றிய அவரை இந்த சமயத்தில் வாழ்த்துவதில் மிகுந்த மன நெகிழ்ச்சி கொள்கிறேன்.

மனுஷ்ய புத்திரன்

Saturday, February 26, 2005

சுதந்திரம் பிளவு படாதது.





சங்கராச்சாரியார் விவகாரத்தில் ஜெயலலிதா அரசு காட்டி வரும் தீவிரம் இது ஒரு குற்ற வழக்கு மட்டுமல்ல என்ற சந்தேகத்தை ஒவ்வொரு நாளும் தீவிரமடையச் செய்து வருகிறது. அண்மையில் ஆடிட்டர் குருமூர்த்திமீது சங்கராச்சாரியார் விவகாரம் தொடர்பாக எழுதிய கட்டுரைகளுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சட்டப்படி தெரிவிக்கவேண்டிய தகவல்களை மறைத்தல், உயர் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் கூற மறுத்தல், போலி ஆதாரங்களை அளித்தல் என பல்வேறு பிரிவுகளில் குற்றம் சாட்டப்ப்படுள்ளது.. சோ, த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியர் மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோர் குருமூர்த்தியின் கட்டுரைகளை பிரசுரித்ததற்காக காவல்துறையினரால் விசரிக்கப்பட்டிருக்கின்றனர். ஜெயலலிதா அரசு பத்திகைகள் மேல் நடத்திவரும் தாக்குதல்களின் இன்னொரு அத்தியாயமே இந்த வழக்கும் விசாரணைகளும். அரசின் அதிகாரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகள் பற்றிய கேள்விகளை இது மீண்டும் ஒரு முறை விவாதத்திற்குக் கொண்டுவருகிறது.

சோ போன்றவர்கள் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் ஒடுக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது அதில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான பிரிவுகளை எந்தத் தயக்கமும் இன்றி ஆதரித்து நின்றார்கள். அவை தங்களிடம் வராது என்ற ஒரே நம்பிக்கைதான் அதற்குக் காரணம். குருமூர்த்தியின் கருத்துக்கள் இந்துத்வா அமைப்புகள் இப்பிரச்சினையில் வெளியிட்டுவரும் அறிக்கைகளின் இன்னொரு பிரதி மட்டுமே. இந்த வழக்கிற்கு எதிரான கண்மூடித்தனமான எதிர்நிலையை அவரது கட்டுரைகள் வெளிப்படுத்தின. அவை ஒரு பத்திரிகையாளனின் ஆய்வு நிலை சார்ந்த சுயேச்சையான அபிப்ராயங்கள் அல்ல. அது குற்றம் சாட்டபட்ட தரப்பின் நிலைப்பாடு. ஆனால் ஒரு பிரச்சினையில் ஜெயலலிதாவிற்கு உவக்காத கருத்துக்களை சொன்னால் நக்கீரன் கோபால் சந்தித்த அதே விதியைத்தான் சோவும் குருமூர்த்தியும் சந்திக்கவேண்டியிருக்கும் என்பற்கு சாட்சியே இந்த வழக்கு.

பத்திரிகைளில் எழுதப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் தொடர்பாக போலீசிற்கு விளக்கமளிக்கவேண்டும் என்பதை ஒரு விதியாகக் கொண்டால் தமிழக காவல்துறை தனது முழுநேரப் பணியாக அதையே செய்யவேண்டியிருக்கும் .காவல் துறைக்கு பதிலளிக்க மறுப்பதும் அதனிடமிருந்து தகவல்களை மறைப்பதும் ஒரு பத்திரிகையாளனின் ஆதார நெறிகள். இவற்றிற்கு எதிரான சட்டப் பிரிவுகள் நீடித்திருப்பது மிகவும் ஆபத்தானது. அனுமானங்கள், சந்தேகங்கள், மறைமுகத் தகவல்கள் அடிப்படையில் ஒரு பத்திரிகையில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்களும் செய்திகளும் 'உண்மைகள்' அல்ல. ஒரு பிரச்சினையின் மையத்தை நெருங்குவதற்கான பல்வேறு நிலைகளிலான பாதைகள் அவை. அவை ஏற்கப்படவோ மறுக்கபடவோ செய்யலாம். ஆனால் அவற்றை அழிக்க முயற்சிப்பது இந்த அரசிற்கு கருத்துக்கள் தொடர்பாக இருக்கும் பதட்டத்தையே காட்டுகிறது.

இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் சம்பந்தமான பிரச்சினைகளில் எடுக்கப்படும் நிலைப்பாடுகள் பல சமயங்களில் பெரிதும் சுயசார்புகளை மையமாகக்கொண்டிருக்கின்றன. இவை ஒருபிரச்சினையின் ஆதாரமான கேள்விகளை பலவீனமடையச் செய்துவிடுகின்றன. பாதிக்கப்படும் நபர்களின் பின்புலங்கள் முரண்பாடுகளைக் காட்டிலும் முக்கியமானவை ஒரு சமூகத்தில் அரசு எந்திரத்தின் அதிகாரத்திற்கும் சிவில் உரிமைளுக்கும் இடையிலான பிரச்சினைகள். இந்த உரிமைகளை நாம் ஒருமுறை பாதுகாக்கத் தவறினால் அவற்றை மீண்டும் அடைவது கடினம். இங்கு பத்திரிகையாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் பல சயங்களில் இரட்டை நிலைப்பாடுகளே இருக்கின்றன. ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சினைகளில் குறைந்த பட்ச அளவில்கூட பொதுக் கருத்துக்கள் எட்டப்படுவதில்லை.

சுதந்திரம் பிளவுபடாதது.

மனுஷ்ய புத்திரன்
உயிர்மை மார்ச் 2005 தலையங்கம்
uyirmmai@gmail.com

Monday, February 14, 2005

காதல் கவிதைகள்:8 மனுஷ்ய புத்திரன்

காதலர் தினத்தை ஒட்டி நான் திட்டமிட்டபடி விரிவான அளவில் கவிதைகளை உள்ளிடமுடியாதபடி பல்வேறு வேலைகள் வந்து குறுக்கிட்டுவிட்டன. ஆனாலும் சில கவிதைகளையேனும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடிந்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி. பி.கே. சிவக்குமார் போன்ற நண்பர்கள் சில கவிதைகள் தொடர்பாக எழுதியுள்ள ஆழமான குறிப்புகள் மிகவும் மகிழ்ச்சி தருகின்றன. கவிதைகளையோ பிற இலக்கியப் பிரதிகளையோ முன்னிட்டு இத்தகைய பேச்சுக்களை உயிர்மை வலைப்பதிவில் உருவாக்க பேராவல் எழுகிறது. திரு நாராயணன் இப்பதிவை தொடர்ந்து தன்னுடைய வலைப்பதிவில் மேலும் சில கவிதைகளை இட்டிருந்தார்.

மொத்தத்தில் இது மிகவும் மகிழ்ச்சி தரும் அனுபவம்.
எனது இரு கவிதைகளைச் சொல்லி இந்தக் காதலர் தினப் பேச்சுக்களை நிறைவு செய்யலாம். காதல்களைத் தொடர்ந்தபடி...


இழந்த காதல்

நின்று சலித்த என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது

மரங்கள் நடப்பது சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்

ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்


அந்த இடம்

போகும்போது
உன்னுடன் கொண்டு
வந்த எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்கிறாய்

ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது

நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்