Wednesday, April 05, 2006

ஹை டெக் அமைச்சரின் உடல் மொழியும் வாய் மொழியும்.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.கவின் மிகப் பெரிய பிரசார பீரங்கி வை.கோ என்பதில் சந்தேகமில்லை. வை.கோ வின் டி.வி ஆசை தீரத் தீர ஜெயாடிவியில் காட்டிக் கொண்டிருக்கும் வை.கோவின் தனி நபர் நடிப்பை உலகெங்கும் உள்ள தமிழ் கூறும் நல்லுலகம் கண்டு களித்துக்கொண்டிருக்கிறது. வை.கோவின் பேச்சுக்கு கிடைக்கும் இந்த வரவேற்பு ஜெயலலிதாவை வெகுசீக்கிரம் பதட்டமைடையச் செய்யப் போவது உறுதி. ஜெயலலிதா அவருடைய நிழலில் ஒரு புல் பூண்டைக் கூட வளர விட மாட்டார். வை.கோவின் நாக்கை எப்போது கட்ட வேண்டும் என்று ( அறுக்க வேண்டும் என்று எழுதினால் மிகவும் வன்முறையாகப் போய்விடும்) அவருக்குத் தெரியும். இந்தப் பதிவில் நான் குறிப்பிட வந்தது இதையல்ல. சன் டிவி மற்றும் தினகரன் நாளிதழின் மீது வை.கோ தொடுத்துவரும் தாக்குதல் மற்றும் அதற்கு மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நேற்றைய பொதுக் கூட்டமொன்றில் அளித்த பதிலடிதான் சுவாரசியமான விஷயம். தினகரனையும் சன் டிவியையும் விமர்சித்ததற்காக வை.கோமீது மன்னிப்புக் கேட்காவிட்டால் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பினார்.



இதற்கு பதிலாக வை.கோ.

'நீ மட்டும் உண்மையான ஆண்மகனான இருந்தால் என்மீது வழக்குத் தொடு. இதோ, சூரியன் அஸ்தமித்து விட்டது. நீ கொடுத்த 24 மணி நேரக் கெடுவும் முடிந்து விட்டது. என் மீது வழக்கைத் தொடு. இந்த வைகோ மரணத்தை முத்தமிட்டாலும் முத்தமிடுவானே தவிர உன்னிடம் மன்னிப்புக் கேட்க மாட்டான். நீதிமன்றத்தில் வழக்குரைஞர் இல்லாமல் நானே என் வழக்கை ஆடுவேன். உன்னை சாட்சிக் கூண்டில் ஏற்றி கேள்விகள் கேட்பேன். அப்போது பல ரகசியங்கள் அம்பலமாகும்."


என்று சொன்னதற்கு பதிலடியாக தயாநிதி மாறனின் பேச்சு இது.

'நீ சரியான் ஆண்மகனாக இருந்தால் ..மீசை வைத்த ஆம்பளையாக இருந்தால் உன் பக்கத்தில் மேடையில் அமரப்போகும் ஜெயலலிதாவைப் பார்த்துக் கேள். ..என்னை 19 மாதம் சிறையில் அடைத்தது ஏன்? மன்னிப்புக் கேள்.!'' என்று ஜெயலிதாவைப் பார்த்துக் கேட்கத் தயாரா?

தரங்கெட்டுப் பேசிவிட்டு அது கிராமத்துப் பாஷை என்கிறாயே, நான் சென்னை பாஷையில் கேட்கிறேன். ஒண்டிக்கு ஒண்டி வர்றியா? (அப்படீன்னா?) என்னோடு மோதத் தயாரா? முடியுமா உன்னால்? உன் வண்டவாளங்கள்தான் ஒவ்வொரு நாளும் செல் போன்கள் மூலம் தண்டவாளம் ஏறி உலகம் சிரிக்கிறதே...?

உன்னைப் போல் அல்ல உன்னைவிட கடுமையாகப் பேச எனக்கும் தெரியும். நீ என்ன பெரிய வழக்கறிஞனா பேச்சாளானா? உன் வழக்கில் வாதாடி ஜெயிக்கவே உன்னால் முடியவில்லை. நீ என்னை ஜெயிக்கப்போகிறாயாக்கும்.

எங்கள் இலக்கு ஜெயலலிதாதான் எனவே வைகோவே போ...உன்னை மன்னித்து விடுகிறேன்..

இப்படிப் போகிறது. தொலைக் காட்சியில் தயாநிதி மாறனின் இந்தப் பேச்சை பார்த்தபோது அவர் வைகோவின் உடல் மொழியை அப்படியே பின்பற்ற மிகவும் பிரயாசைப்படுகிறார். அவரைப்போலவே கால்களை எக்கி எக்கி உணர்ச்சிகளை வெளிப்படுத்த முயல்கிறார். அநாகரிகமாகப் பேசுவதில் அவரது விருப்பமும் பிரயாசையும் நன்றாகத் தெரிகிறது. ஆனால் இந்தியாவின் மெத்தப் படித்த, ஹை டெக் அமைச்சர் ஆயிற்றே. தமிழே கஷ்டப்பட்டுப் பேசும் தயாநிதி மாறன் கொச்சைக்கு எங்கே போவது? ஆனாலும் செந்தமிழே நாப்பழக்கம் என்கிறபோது இந்தத் தமிழை பழகிக் கொள்வது ஒன்றும் கஷ்டமல்ல. மேலும் ஆபாசமாக பேசக் கற்றுக் கொள்வது தயாநிதி மாறனின் மேட்டுக் குடி பாவனைகளை களைந்து 'மக்களிடம்' மிகவும் நெருங்கிச் செல்லப்பயன்படலாம். சிவாஜி கணேசன் ஒரு அமெச்சூர் நடிகனைப்பார்த்து புன்னகைப்பதுபோல வை.கோ தயாநிதி மாறனைப் பார்த்து புன்னகைக்கக் கூடும். ஆனால் இந்தப் பேச்சு கலைஞருக்கு நிச்சயம் பதட்டத்தை கொடுத்திருக்கும். மேடையிலேயே ' பெரியார் அண்ணா பாசறையில் பயிற்சி பெற்றவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்' என்று பேரனை செல்லமாகக் கடிந்துகொண்டார்.(அதே மேடையில் வீற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா. பாண்டியன் ' இந்த அளவு மத்திய தடம் புரண்டு பேசுகிறார் என்றார் எந்த அளவுக்கு அவர் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பார்' என விளக்கமளித்து தயாநிதி மாறனை ஒரு மன நோயாளி ரேஞ்சூக்கு கொண்டு சென்றுவிட்டார். தயாநிதி மாறனுக்கு மனப் பிறழ்வை தூண்டியதற்காக நஷ்ட ஈடு கேட்டு வை.கோவிற்கு நோட்டீஸ் அனுப்ப சட்டத்தில் இடம் இருக்கிறதா தெரியவில்லை.) ஏனெனில் ஸ்டாலினிடம் இதுபோன்ற ஒரு அதிரடியை தன் வாழ்நாளில் ஒரு முறைகூட பார்க்கும் சந்தர்ப்பம் கலைஞருக்கு வாய்க்கப் போவதில்லை. இது போன்ற பேச்சுக்கள் தொண்டர்களிடம் எத்தகைய வரவேற்பை தயாநிதி மாறனுக்கு வருங்காலத்தில் பெற்றுத்தரும் என்பது கலைஞருக்குத் தெரியும்.

திராவிட இயக்கத்தின் உண்மையான அடுத்த கட்ட வாரிசு உதயமாகிவிட்டார் என்பதற்கு அடையாளமாக தயாநிதி மாறனின் இந்தப் பேச்சை தமிழர்கள் கொண்டாட வேண்டும்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Sunday, March 26, 2006

யாருடைய முத்தங்களும்

யாருடைய முத்தங்களும்
யாருக்கும் நினைவிருப்பதில்லை
கசப்பின் சின்னஞ் சிறுகீறல்
உங்ளங்கை ரேகையாகப் படிந்து
நம் விதியை எழுதுகிறது

எல்லாப் பரிசுப்பொருட்களும்
எப்படியோ பழசாகிவிடுகின்றன
புறக்கணிப்பின் முற்களோ
யாரும் நீருற்றாமலேயே வளர்ந்துகொண்டிருக்கின்றன

எவ்வளவு நேரம் தட்டிக்கொண்டிருந்தோம்
பிரியத்தின் ஒற்றை சாளரம் திறக்க
இருள் வருவதுபோல
சுவர்களைக் கடந்து உள்ளே வந்துவிடுகிறது
கசப்பின் நிழல்கள்

நீ என்னிடம் வரும்போது
ஒரு பறைவையின் சிறகுகளோடு வருகிறாய்

போகும்போது
புகைபோக்கியின் வழியாக
ஆவியாகிச் செல்கிறாய்.

மனுஷ்ய புத்திரன்

Saturday, March 25, 2006

ஒரே ஒரு மீன்

மீன் தொட்டியில்
எல்லா நீரையும் வடித்த பிறகு
மீன்கள்
தம் பனித்த
உறைந்த கண்களால்
வெறுமனே
ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருகின்றன

ஒரு மீன்
துள்ளுகிறது.

சும்மா
துள்ளுகிறது.

யாரும் பதட்டமடையத்
தேவையில்லை.

எனக்கு உறுதியாகத் தெரியும்

ஒரே ஒரு மீன்தான்
துள்ளுகிறது.

மனுஷ்ய புத்திரன்

Sunday, March 19, 2006

பிம்பம்

என்னை நீ
புரிந்துகொள்வதில்
புதிர்களோ
குழப்பங்களோ
இல்லை

எனது நிழல்களுக்கு
நீ அஞ்சவேண்டியதுமில்லை

நீ திறக்க முடியாத
எனது பெட்டிகளில் சாவித் துவாரங்களில்
துருப்பிடித்த ஆணிகளைச் சொருகத் தேவையே இல்லை

நான் கைமறதியாய் விட்டுச் செல்லும் தடயங்களில்
என்னைபற்றி உனக்கு
எதுவுமே கிடைக்கப் போவதில்லை

சும்மா
ஒரு சுவாரசியத்திற்காக
கண்ணாடியில் என் பிம்பங்களை
கொஞ்சம் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறேன்
அவ்வளவே

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Saturday, November 26, 2005

சுந்தர ராமசாமி நினைவரங்கு : சொல்லின் கால் தடங்கள்

Image hosted by Photobucket.com

நாள்:27.11.2005 காலை 10 மணி முதல் ஒரு மணிவரை
இடம்:தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகம்
அண்ணா சாலை, (ஆனந்த் திரையரங்கம் அருகில்)
சென்னை

நூல் வெளியீடு

ஜெயமோகனின்
சுந்தரராமசாமி:நினைவின் நதியில்

வெளியிடுபவர்:ஜெயகாந்தன்
பெற்றுக் கொள்பவர்:பாலு மகேந்திரா

சிறப்புரைகள்:
கல்பற்றா நாராயணன்
ந.முத்துசாமி
எம்.யுவன்
கே.எம்.ஆதிமூலம்
நாஞ்சில் நாடன்
பிரபஞ்சன்
ஜெயமோகன்
சி.மகேந்திரன்
ஒருங்கிணைப்பு: மனுஷ்ய புத்திரன்.



உயிர்மை உங்களை அன்புடன் அழைக்கிறது.

தொடர்புகளுக்கு:


email:uyirmmai@gmail.com
phone:044-24993448
mobile:9444366704

Monday, October 31, 2005

சன் டிவி பற்றிய குறிப்பும் சில எதிர்வினைகளும்

சென்னை மழை பற்றிய என்னுடைய முந்தைய பதிவு தொடர்பாக ஊடக வன்முறை குறித்த தங்கள் தீவிரமான பார்வைகளை முன்வைத்த நண்பர்களுக்கு நன்றி. அதில் இரண்டு எதிர்வினைகள் பற்றி இங்கு குறிப்பிடவிரும்புகிறேன்.

சத்யம் என்ற பெயரில் இடப்பட்ட எதிர்வினையில் நான் என்னைவிட வசதியான ஊடகத்தை பார்த்து வயிற்றெரிச்சலில் இப்படி எழுதிருக்கிறேன் என்கிறது. இன்னொரு பெயரில்லாத எதிர்வினை பெண்களுக்கு ஆபாச sms அனுப்புவதைவிட்டு சன் டிவிக்காக கண்ணீர் விடலாம் என்கிறது. தமிழ் வலைபதிவுகளிஎழுதுபவர்களின் தார்மீகமின்மைகள் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இதுபோன்ற அவதூறுகளின் நோக்கம்:

1. ஒரு விவாதத்தை முறித்து திசை திருப்புவது.
2.அவமானப்படுத்தி குரூர திருப்தி அடைவது.
3. அசலாக ஒரு வாக்கியத்தையோ அபிப்ராயத்தையோ உருவாக்க முடியாமல் பிறரது அபிப்ராயங்களின் நிழலில் சுய மைதுனம் செய்வது.
4. இருட்டிலிருந்து கல்லெறிந்து அபிப்ராயங்களை உருவாக்குபவர்களை துரத்துவது.

இதுபோன்ற ஆபாசங்களை வலைப்பதிவிலிருந்து நீக்கிவிடுவது சுலபம். ஆனால் அதை நான் செய்ய மாட்டேன். ஒரு சமூகத்தில் ஆபாசமும் வக்கிரமும் பதிவு செய்யப்படவேண்டும். அப்போதுதான் நம்மால் அதை எதிர்கொள்ள முடியும். நோயின் அறிகுறிகள் சுதந்திரமாக வெளிவரவேண்டும். சமூகவியலிலும் உளவியலிலும் ஆர்வம்கொண்ட எழுத்தாளன் என்ற வகையில் இதுபோன்ற பதிவுகள் எனக்கு உற்சாகம் அளிக்கின்றன. இவற்றை எழுதும் நபர்கள் இன்னும் கூட தங்களது மனோவிகாரத்தையும் கீழ்மையையும் விரிவாக பதிவு செய்வது அவசியம். வலைப்பதிவுகளின் உபயோகமும் கருத்து சுதந்திரத்தின் பயன்பாடும் தமிழ் வலைப்பதிவுகளில் முற்றிலும் புதிய தளத்தை எட்டியிருப்பதை மகிழ்ச்சியுடன் அங்கீகரிக்கிறேன்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Thursday, October 27, 2005

சென்னை மழையில் சன் டிவியின் உளவியல் வன்முறை

சென்னையில் பேய் மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. பல்வேறு துறையினராலும் நாசமாக்கபட்ட சாலைகளில் தண்ணீர் வடிய வசதியின்றி ஜனங்கள் கடும் இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர். வீடுகளில் தண்ணீர் வந்தது பற்றி நண்பர்கள் தொலைபேசியில் தெரிவித்துவருகின்றனர். சில பகுதிகளில் முழங்கால்வரை தண்ணீர் ஓடுகிறது என்றும் தெரிவித்தனர். காலையில் ஒன்பது மணியிலிருந்து மின்சாரம் நிறுத்தபட்டு மாலை நான்கு மணிக்கு மீண்டும் வந்தது. அவ்வளவுதான் பிடித்தது சனியன். சன் டிவியில் சென்னையே பிரளயத்தில் மூழ்கிக் கொண்டிருப்பதாக அலறல். நேரடி ஒளிபரப்பில் அதன் செய்தியாளர்; அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல் மக்கள் நடுங்குவதாக தெரிவிக்கிறார். அப்புறம் மும்பை மழையை விடக் கடுமையாக மழை பெய்யப் போகிறது என்று பயமுறுத்துகிறார். வானிலை அதிகாரியின் பேட்டியில் அப்படி எதுவும் இல்லை. கார்பரேஷன் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்களா என்று ஸ்டுடியோவிலிருந்து தொகுப்பாளர் கேட்கிறார். நடவடிக்கை எடுத்தார்கள், ஆனால் எந்த அளவுக்கு எடுத்தார்கள் என்று தெரியவில்லை என ஆரம்பித்து உடனடியாக மக்களின் அவதியை ஆளும் கட்சிக்கு எதிராக ஆதாயமாக்கிக் கொள்ளும் முயற்சி...

இது போன்ற நெருக்கடியான சந்தர்பங்களில் மக்களுக்கு நம்பிக்கையும் வழிகாட்டுதலும் தேவை. ஆனால் செய்திகள் மிகைப்படுத்தப்படுவது மட்டுமல்ல அவை பீதி ஊட்டும் வகையில் திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன. வதந்திகள் பெருகுகின்றன.

சுனாமியின்போதும் இதுதான் நடந்தது. ஊடகங்களின் வன்முறை நமக்குப் புதிதல்ல. ஆனால் எப்போதும் அவை மக்களுக்கு மேல் பிணந்தின்னிக் கழுகாக பறந்துகொண்டிருக்க வேண்டுமா என்ன?

நாளை காலை புயல் கரையை கடக்கும் என்கிறார்கள். நாம் சன் டிவியை எப்படி கடப்பது என்றுதான் தெரியவில்லை.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Sunday, October 16, 2005

சுராவின் மறைவும் இருப்பும்

(சுரா மறைந்த நான்கு மணிநேரத்திற்குப் பிறகு அதைபற்றிய முதல் பதிவினை உயிர்மை பதிவினில் அளித்தேன். அது தென்பட்டு மறைந்துபோனதாக திரு.பத்ரி தனது வலைப்பதிவினில் குறிப்பிட்ட பிறகே எனக்கு அது காணமல் போனது தெரியும். அது இப்போது அவ்வளவு முக்கியமல்ல. செய்தி அறிந்த முதல் கணத்தில் தோன்றிய குழப்பமான நடுங்கும் சொற்களை நான் மறுபடி இட விரும்பவில்லை. ஒரு வார இதழுகாக அளித்த அஞ்சலிக் குறிப்பினை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்)

சுராவின் மறைவு ஒரு மரணத்தைபற்றிய எல்லா சம்பிராதயமான சொற்களையும் கலைத்துவிடகூடியதாக இருக்கிறது. ஒரு எழுத்தாளராகவும் ஆசானாகவும் நண்பராகவும் பத்தாண்டுகளுக்கும் மேலாக சுந்தர ராமசாமியிடம் கொண்டிருந்த ஆழமான உறவின் மீது இந்த மரணம் ஒரு கொடுங்கனவைப்போல படர்ந்துகொண்டிருக்கிறது. அவை வெறும் நினைவுகளோ ஒரு ஆளுமையைப் பற்றிய பதிவுகளோ அல்ல. சுந்தரராமசாமியின் வழியாக உருவாகிவந்த ஒரு தலைமுறைப் படைபாளிகளில் ஒருவன் என்ற முறையில் இந்த மரணத்தை எப்படி நிராகரிப்பது, ஒப்புக் கொள்ள மறுப்பது என்பதுதான் என்னுடைய பிரச்சினை.

இளம்பிராயத்தில் ஜே.ஜே சிலகுறிப்புகளைப் படித்து மனப் பிறழ்வுக்கு ஆளானவர்களில் நானும் ஒருவன். ஜே.ஜே உருவாக்கிய நிம்மதியின்மைகளும் கேள்விகளும் அன்றாட வாழ்வில் என்னுடைய சகஜமான இருப்பை நிலை குலைய வைத்தன. அந்த நிம்மதியின்மையோடு சுராவை போய்பார்த்தேன். இளைஞர்களிடம் அவர் பாராட்டிய தோழமை உணர்வு மகத்தானது. சொல்வதைக் காட்டிலும் அவர் கேட்பவராக இருந்தார். அறிவுறுத்துவதைக் காட்டிலும் புரிந்துகொள்ள விரும்புபவராக இருந்தார். எப்போதும் இது அவருடன் ஒரு இணக்கத்தையும் நம்மைப் பற்றிய பதட்டத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது.

அவர் தொடங்கி இடைநிறுத்திய காலச்சுவடு இதழ் மீண்டும் தொடங்கப்பட்டபோது அதன் ஆசிரியர் குழுவில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இது சுமார் பத்தாண்டுகாலம் சுராவுடன் தீவிரமான பரிமாற்றங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்தது. இந்தச் சந்தர்ப்பம் எனது மொழியை சிந்தனையை மனோபாவத்தை கடுமையாக பாதித்தது. நான் அவருடைய ஆளுமையால் தீவிரமாக ஆக்கரமிக்கப்படுபவனாகவும் எனக்குள் அதை சிலசமயம் எதிர்த்துப் போராடுபவனாகவும் இருந்திருக்கிறேன்.


சுமார் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சுரா ஒரு இயக்கமாக இருந்தார். தமிழ் வாழ்வில் சிறுமைகள் குறித்த கண்டங்களும் கேள்விகளும் அவரது எழுத்துக்களின் அடிப்படை நீரோட்டமாக இருந்திருக்கிறது. இந்தக் கேள்விகளை அவர் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. பல எழுத்தாளர்கள் தங்கள் வாழ்வில் செய்துகொள்ள நேர்ந்த சமரசங்கள் எதையும் சுரா செய்துகொள்ள நேரவில்லை.

தமிழில் மிகவும் அதிகமாக விமர்சிக்கப்பட்ட எழுத்தளாராக சுந்தர ராமசாமியைத்தான் குறிப்பிட முடியும். இலக்கியம் சார்ந்த காரணங்களைவிட இலக்கியம் அல்லாத காரணங்களுக்காவே அவர் பெரிதும் விமர்சிக்கப்பட்டிருக்கிரார். எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. ஆனால் சுரா தனது அரசியலையும் நம்பிக்கைகளையும் தெளிவாக முன்வைத்தார். அதனாலே அவரை விமர்சிப்பவர்களுக்கான ஆயுதங்களை அவரே எப்போதும் வழங்கினார். ஆனால் அவருடைய எல்லா சிந்தனைகளும் செயல்பாடுகளும் ஒரு வெட்ட வெளியில் மூட்டப்பட்ட நெருப்பைப் போல சில சமயம் புகைந்துகொண்டும் சில சமயம் எரிந்துகொண்டும் இருந்தன.

சுரா தமிழில் மூன்று தலைமுறை படைப்பாளிகளை பாதித்திருக்கிறார். அவர் இலக்கியத்தில் உருவாகிய சில மதிப்பிடுகளும் சமூகத்தைப் பற்றிய விமர்சனங்களும் பல்வேறு விவாதங்களை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அவரது கேள்விகள் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும். இந்த கேள்விகள் சில சமயங்களில் சுராவைப் பற்றிய கேள்விகளாகவும் பல சமயங்களில் நம்மைப் பற்றிய கேளிவிகளாகவும் இருப்பது தவிர்க்க இயலாது.

சுரா ஒரு யுகத்தின் அடையாளம். அந்த யுகம் மறைந்துகொண்டிருக்கிறது. அது தன்னுடன் சுராவையும் எடுத்துசெல்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவரது மரணம் சந்திப்பதற்கு கடினமானதாகவும் ஒரு உறைபனியைப்போல சருமத்தை துளைப்பதாகவும் இருக்கிறது.

சுராவின் மரணம் சட்டென ஒரு இடைவெளியை உருவாக்கிவிட்டது. அதைக் கடப்பது அவ்வளவு எளிதாக இல்லை.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Sunday, August 07, 2005

நட்பின் ரகசிய வழி

நண்பர்கள் தினத்தை ஒட்டி இன்றைய தினமணியில் எனது கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. பின்வரும் இணைப்பில் அதைக் காணலாம். நண்பர்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

http://www.dinamani.com/sunday/sundayitems.asp?ID=DS420050805082259&Title=Sunday+%2D+Column&lTitle=%F9R%F4PoLh%D3%FBW

அன்புடன்
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Sunday, June 19, 2005

புதிய கவிதைகள்-11

Image hosted by Photobucket.com

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட
ஒரு மழை நாளில்

குமாஸ்தாக்கள் கோப்புகளிலிருந்து
சற்றே நிமிர்ந்து உட்காருகிறார்கள்

நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு
சற்றே மிதமான தண்டணைகளை
வழங்குகிறார்கள்

கணவர்கள் மனைவிகளுக்கு அளிக்கும்
சுதந்திரத்தைக் கண்காணிக்க கொஞ்சம் மறந்துபோகிறார்கள்.

ஒரு கண்டன ஊர்வலம்
சட்டென மகிழ்ச்சியான ஒரு மன நிலைக்கு மாறுகிறது

செய்யப்படாத வேலைகள் பற்றி
தொழிலாளிகள் பயம் குறைந்து காணப்படுகிறார்கள்

வேலை கொடுத்துக்கொண்டிருப்பதை
மறந்து முதலாளிகளும் கொஞ்சம் மழையை வேடிக்கை பார்க்கிறார்கள்

பெட்ரோல் பங்கில் எனக்கு பின்னால் காத்திருப்பவன்
இன்று எந்த விரோதமும் இல்லாமல் இருக்கிறான்

வகுப்பறைகளில் குழந்தைகள்
ஆசிரியர்களைப் பற்றிய பயங்கரம் நீங்கி
வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

நண்பர்கள்
நண்பர்களைப் போலவே காட்சியளிக்கிறார்கள்.

எல்லா இடத்திலும் ஈரம் பரவிக்கொண்டிருந்த
ஒரு மழை நாளில்
நான் என் காதலைச் சொன்னபோது
நீ அதை
மறுக்கவும் இல்லை
ஏற்கவும் இல்லை

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Tuesday, April 12, 2005

புதிய கவிதைகள்-10

Image hosted by Photobucket.com


மழை வரும்போது
வந்து சேரும் இந்தத் துக்கம்

ஒரு துக்கத்தைப் போலவே
இல்லை அது

துக்கத்தில் தழுவிக்
கிடக்கும் பெண்

ஒரு பெண் போலவே
இல்லை நீ

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Friday, April 08, 2005

புதிய கவிதைகள்-9

Image hosted by Photobucket.com


''அப்பா நீங்கள்
வீட்டிற்குப் போங்கள்
நான் எப்போதாவது வருவேன்"

மகளின்
உலர்ந்த கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்

கைப்பையை திறந்து திறந்து மூடும்
கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்

தனக்குள் முணுமுணுக்கும் உதடுகளின்
தனிமையை பார்த்துக் கொண்டிருந்தான்

கண்ணீரேயில்லாத
பிரிவுகளை பார்த்துக்கொண்டிருந்தான்

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Thursday, April 07, 2005

புதிய கவிதைகள்-8

Image hosted by Photobucket.com

இறுக மூடிய கைகளை
அவ்வளவு பலவந்தமாக பிரித்துப் பார்த்தீர்கள்

எதற்காகவோ பூட்டி வைத்திருந்த அறையை
கள்ளச் சாவியிட்டு திறந்தீர்கள்

வழியில் கண்டெடுத்த ஏவல் பொம்மையை
வீடுவரை கொண்டு வந்தீர்கள்

ரத்த சாட்சிகளின் மெளனத்தை
வற்புறுத்திக் கலைத்தீர்கள்

ஒரு துரோகத்தின் கதையை
அதன் முடிவுக்கு பயப்படாமல் கேட்கத் தொடங்கினீர்கள்

உங்களுக்கு பைத்தியம் பிடித்த
ஒரு பெளர்ணமியில்
எல்லா உண்மைகளையும் தெரிந்துகொண்டீர்கள்

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Wednesday, April 06, 2005

புதிய கவிதைகள்-7

Image hosted by Photobucket.com

பிசாசுகளின் கவிஞன்
பிசாசுகளைப் போலவே நேசிக்கிறான்

அவன் பற்றுகிற உடல்
அவனது உடலாகிறது

எப்போதும் பயத்திற்குள்
அசைகிறது அவன் வேட்கையின் சாயைகள்

அவனது மர்மத்தின் முடிச்சுகளால்
இறுகிக்கொண்டிருக்கிறது உன் குரல்வளை

எவ்வளவு தூரம் கூடவே வந்தாலும்
யாரும் கவனிப்பதில்லை அவனது உடனிருப்பை

அதிகரித்துக்கொண்டிருக்கும்
உன் படுக்கையறையின் வெப்பம்
எந்த மூச்சிலிருந்து கிளைக்கிறதென
நீ அறிய மாட்டாய்

பிசாசுகளின் கவிஞன்
பிசாசுகளைப் போலவே
எல்லா இடத்திலிருந்தும் வெளியேற்றப்படுகிறான்

பிசாசுகளின் கவிஞனுக்கு
பிசாசுகளைவிடவும்
அதிகம் பசிக்கிறது.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

புதிய கவிதைகள்-6

Image hosted by Photobucket.com


எல்லோரும்
யாருடனாவது இருந்துகொண்டிருக்கிறார்கள்

தொடுகிற ஒவ்வொரு கையிலிருந்தும்
ஒட்டுகிறது யாரோ ஒருவரின் வியர்வை

எந்தப் பாதையிலும் பின்தொடராமலில்லை
ஏதோ ஒரு காலடிச் சத்தம்

எல்லா இணைப்புகளும்
உபயோகத்தில் இருக்கும்
இந்தத் தொலைபேசியில்
நான் உன்னை வந்தடையும்போது
ஒரு பருவம் கழிந்திருக்கும்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Tuesday, April 05, 2005

புதிய கவிதைகள்-5

Image hosted by Photobucket.com


ஒரு மலரைப் பறிப்பது
போல்பறித்தாலும் சரி

ஒரு மிருகத்தை வெல்வதுபோல்
வென்றாலும் சரி

ஒன்றுபோலவே இருக்கிறது
ஒரு அன்பைத் தொடர்வது

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

புதிய கவிதைகள்-4

Image hosted by Photobucket.com


நடக்கலாம்
கால் வலிக்கும்போது கொஞ்சம் உட்காரலாம்
பேசலாம்
வெறுமை சூழும்போது மெளனமாக இருக்கலாம்
கைகளை பற்றிக் கொள்ளலாம்
பயம்வரும்போது கைகளை விலக்கிக் கொள்ளலாம்
ஒரு ஒரு முறை முத்தமிடலாம்
முத்தத்தைப் பற்றி பேச்சு வந்துவிடாமல்
வேறு ஏதாவது பேசலாம்

அவரவர்
வீடு நோக்கிப் போகலாம்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Monday, April 04, 2005

புதிய கவிதைகள்-3

Image hosted by Photobucket.com

உன் கண்கள்
இங்கே எதையுமே
பார்ப்பதில்லை

ஒழுங்குகளை
ரகசியங்களை
பலவீனங்களை
எப்போதும் கசிந்துகொண்டிருக்கும்
காயங்களை

ஒன்றையும்
அவை உற்றுப் பார்ப்பதில்லை.

உன் கண்கள்
கண்களை மட்டுமேசந்திக்கின்றன.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

புதிய கவிதைகள்-2

நீ வரப்போவதில்லை
என்ற போதும்
இன்னொரு கோப்பையில்
கொஞ்சம் மதுவை ஊற்றுகிறேன்

எல்லாத் திரைச் சீலைகளையும்
இழுத்துவிட்ட பிறகும்
எப்படியோ கொஞ்சம்
உள்ளே வந்துவிடுகிறது
ஒருபோதும் எதிர்கொள்ள விரும்பாத
அந்தியின் நிழல்கள்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Sunday, April 03, 2005

புதிய கவிதைகள்-1

நம்முடைய இரவுகள்
தேம்புகின்றன

நம்முடைய பகல்கள்
ஆவியாகிவிடுகின்றன

நம்முடைய இந்தக் காதல்
கடலுக்கடியில்
ஒரு புராதனக் கோயிலாக
மிதந்து கொண்டிருக்கிறது.

மனுஷ்ய புத்திரன்