Sunday, November 05, 2006

சதாமுக்கு மரண தண்டணை

21 ஆம் நூற்றாண்டில் வரலாற்று ரீதியாக முதன்முதலாக பதிவு செய்யப்படும், மிகப்பெரிய தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. உலகளாவிய அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய தீர்ப்பு இது. அவரது இரு சகாக்களுக்கும் இந்த தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு சட்டவிரோத நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட கேலிக்கூத்தான தீர்ப்பு என்று கூறிய சதாமின் வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். சதாம் இன்னும் ஒரு மாதத்தில் தூக்கிலிடப்படுவார், பத்து நாளைக்குள் மேல் முறையீடு செய்யலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதி தீர்ப்பை வாசிப்பதை பொருட்படுத்தாமல் சதாம் ' அல்லாஹு அக்பர்' என்று தொடர்ந்து நீதி மன்றத்தில் முழங்கிக்கொண்டிருந்தார். இந்த முழக்கம் இடம் பெற்ற உணர்வுபூர்வமான தருணம் உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்களின் இதயத்தை தொடக்கூடியது என்பதில் சந்தேகமில்லை. இந்த தீர்ப்பு நிறைவேற்றப்பட்டால் அது சர்வதேச அளவில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் மிகக் கடுமையானவையாக இருக்கக் கூடும். அமெரிக்காவும் ஐரோப்பாவும் அதற்கான விலையை நெடுங்காலத்திற்கு கொடுக்க நேரிடலாம். மத்திய கிழக்கில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்த சதாம் கொல்லப்படுவது பயன்படும் என அமெரிக்கா நினைப்பது வீண் கனவு.

சதாம் நிரபராதி அல்ல. ஆனால் அமெரிக்கா அவருக்கு தண்டணை வழங்க முடியாது. சதாமின் குற்றங்களுக்காக அவரை தூக்கிலிடுவது சரி என்றால் சதாமிற்கு அருகில் ஜார்ஜ் புஷ் சர்வதேச அளவில் புரிந்திருக்கும் போர்க் குற்றங்களுக்காக நூறு முறை தூக்கிலிடப்பட வேண்டும்.

இந்த தீர்ப்பை தொலைக் காட்சியில் இன்று மாலை பார்த்துக் கொண்டிருந்தபோது இரண்டு விஷயங்கள் வினோதமாக இருந்தன. முதலாவதாக தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் முகத்தில் காணப்பட்ட பதட்டமும் ஆத்திரமும். மேலும் அவரிடம் வெளிப்பட்ட சாத்தானின் உருத் தோற்றம். இது ஒரு நாடகக் காட்சியைப்போல இருந்தது. இரண்டாவதாக, பி.பி.சி ஈராக்கில் இத் தீர்ப்பை ஆதரித்து மக்கள் கொண்டாட்டங்களை நிகழ்த்துவதாக ஒரு படத் தொகுப்பினை காட்டியது. அதே படத் தொகுப்பை காட்டி தீர்ப்பிற்கு எதிராக மக்கள் கலவரத்தில் ஈடுபடுவதாக சன் டி.வி செய்தியில் காட்டப்பட்டது.

சதாம் அவ்வளவு எளிதில் தூக்கிலிடப்பட மாட்டார் என்றே இப் பதிவை எழுதும்போது தோன்றுகிறது. இந்தப் பிரச்சினையில் இந்தியா கோழைத்த்னமான மவுனம் சாதிக்க கூடாது என்றும் தோன்றுகிறது.

மனுஷ்ய புத்திரன்