Wednesday, April 06, 2005

புதிய கவிதைகள்-7

Image hosted by Photobucket.com

பிசாசுகளின் கவிஞன்
பிசாசுகளைப் போலவே நேசிக்கிறான்

அவன் பற்றுகிற உடல்
அவனது உடலாகிறது

எப்போதும் பயத்திற்குள்
அசைகிறது அவன் வேட்கையின் சாயைகள்

அவனது மர்மத்தின் முடிச்சுகளால்
இறுகிக்கொண்டிருக்கிறது உன் குரல்வளை

எவ்வளவு தூரம் கூடவே வந்தாலும்
யாரும் கவனிப்பதில்லை அவனது உடனிருப்பை

அதிகரித்துக்கொண்டிருக்கும்
உன் படுக்கையறையின் வெப்பம்
எந்த மூச்சிலிருந்து கிளைக்கிறதென
நீ அறிய மாட்டாய்

பிசாசுகளின் கவிஞன்
பிசாசுகளைப் போலவே
எல்லா இடத்திலிருந்தும் வெளியேற்றப்படுகிறான்

பிசாசுகளின் கவிஞனுக்கு
பிசாசுகளைவிடவும்
அதிகம் பசிக்கிறது.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

No comments: