Sunday, February 13, 2005

உயிர்மை வலைப்பதிவும் காதலர் தினத்தைக் கொண்டாடுகிறது

காதலர் தினம் வருவதற்கு பலதினங்களுக்கு முன்பே எனக்குள் ஒர் பயங்கரப் பீதி பரவ ஆரம்பித்துவிடுகிறது.காரணம் தமிழ் ஊடகங்கள்தான். காதலர்தினத்தை ஒட்டி தமிழ்ப்பத்திரிகைகள் வெளியிடும் ஆய்வுக்கட்டுரைகளும் பேட்டிகளும் காதலை போஸ்ட்மார்ட்டம் செய்யும்விதம் விவரிக்க இயலாததது. காதல் என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து, காதல் நவீன வாழ்க்கையில் அடைந்துவரும் மாற்றங்கள், உண்மையான காதல் என்றால் என்ன, நட்புக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசம், காதலர் தினக் கொண்டாட்டத்திற்குப் பின்னே இருக்கும் நுகர்வோர் கலாச்சாரம், மேட்டுக்குடி கலாச்சாரம்... என என அறுவைகளுக்கு ஒரு அளவே கிடையாது. இதில் வெகுசன ஊடகங்களில் பணியாற்றும் நண்பர்கள் சிலர் 'கருத்து' வேறு கேட்பார்கள். தமிழர்களுக்கு எதை எடுத்தாலும் எதற்கு அது சம்பந்தமாக இவ்வளவு கருத்து தேவையாக இருக்கிறது என எனக்குப் புரியவேயில்லை.

உயிர்மையின் இந்த வலைப்பதிவில் காதலர் தினத்தை முன்னிட்டு இப்போதிலிருந்து காதலர் தினம் முடியும்வரை தமிழில் எழுதப்பட்ட முக்கியமான சில காதல் கவிதைகளை உள்ளிடப்போகிறேன். நண்பர்களே உங்களுக்கு அவகாசமும் விருப்பமும் இருந்தால் உங்களுக்கு பிடித்த காதல்கவிதைகளை இந்தப் பதிவில் எழுத அன்புடன் அழைக்கிறேன்.

காதல் வாழ்க..கருத்துக்கள் ஒழிக. (இதுவும் ஒரு கருத்துதான்)

அன்புடன்

மனுஷ்ய புத்திரன்
manushyaputhiran@yahoo.com

15 comments:

ROSAVASANTH said...

காதல் வாழ்க என்ற கருத்து வாழ்க!

கவிதைகளுக்கு காத்திருக்கும்...

Shankar said...

காதல்னே கிடையாது, தமிழனுக்கு எல்லாத்துக்குமே இவ்வளவு கருத்து தேவைப்படுது. இதுக்கெல்லாம் ஃபீலாவலாமா? போனா போவுது. காதல் வாளுக! காதலர்கள் வாளுக!

கவிதைகளுக்காக வந்தனம் :-)

Anonymous said...

காதல் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று மனுஷ்ய புத்திரன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பின்வரும் கவிதையைப் பகிர்ந்து கொள்கிறேன். இந்தக் கவிதை நல்ல கவிதையா என்று தெரியாது. ஆனால், இணையக் குழுமமான ரா.கா.கி.யில் இதைப் பகிர்ந்து கொண்ட அந்த நாளில், நான் படைப்புகளில் மட்டுமே அறிந்திருக்கும் எஸ்.வைத்தீஸ்வரன் "உங்கள் ஞாபகங்கள் கவிதை நெடுநாள் ஞாபகத்தில் இருக்கும்" என்று எழுதிய தனிமடல் பாராட்டு என் மற்றெல்லாக் காதல் கவிதைகளையும் விடுத்து, இதை இங்கே பகிர்ந்து கொள்ளச் சொல்கிறது. அன்புடன் - பி.கே. சிவகுமார்

ஞாபகங்கள்

- பி.கே. சிவகுமார்

வயல்வெளிகளினூடே
ஊர்ந்து கொண்டிருக்கிறேன்
கடக்கின்ற ஒவ்வொரு அங்குலத்திலும்
உன் காலடி பார்க்கின்ற
ஞாபகங்கள்

அவ்வப்போது
பெருத்துக் கொழுத்த
எலிகள் விருந்தாகவும்
நோஞ்சானாய் சிறுத்துக்
கருத்த எலிகள் பசிக்காகவும்
வந்து மாட்டுவதுண்டு
விழுங்குவதற்கு முன்
எல்லா எலிகளின்
கண்களின் பரிதாபத்திலும்
உன் ஞாபகங்கள்

சிலவேளைகளில்
இணைத் தேடி காத்திருக்கும்
சாரைகளின் மீது
நஞ்செனும் விந்து பாய்ச்சிருக்கிறேன்
பிணையும்போதும்
இணைந்து பிரியும்போதும்
உன்னுள் என்னை இழந்த
ஞாபகங்கள்

அவ்வப்போது
தலைக்குமேலே வட்டமிடும்
கருடன்களிலிருந்து
தப்பிக்க ஓடியிருக்கிறேன்
புதர்கள் தேடி.
அப்போதெல்லாமும் கூட
உன் பின்னே ஓடிக்
களைத்த ஞாபகங்கள்

எப்போதோ சிலமுறை
கீரியின் பாதையில்
சிக்கிக் கொண்டிருக்கிறேன்
சீறிச் சீறி சண்டையிட்டபோதும்
விஷம் கக்கி கக்கி
ரத்தம் சிந்த பின்வாங்கியபோதும்
உன்னை வெல்ல முயன்று
தோற்றுப்போன ஞாபகங்கள்

எத்தனை முறை
என்னை மறந்து
உன்னை மறக்கத் தோலுரித்தாலும்
ஒவ்வொரு சட்டையிலும்
திட்டு திட்டாய்
உன் ஞாபகங்கள்

- PK Sivakumar

ROSAVASANTH said...

கவிதை எனக்கும் பிடித்திருந்தது.

Anonymous said...

Rosa, Dont know if its a comment about my kavithai. I am used to only personal attacks from you and so just confirming. Anyway, lets not go there. If its about my kavithai, thank you. - PK Sivakumar

ROSAVASANTH said...

yes, I liked this kavithai, thats waht I commented about. About 'personal attacks', no comments here!

ilavanji said...

எல்லாரும் இலக்கியத்தரமான காதல் பன்னனும்னா முடியுமா மனுஷ்ய புத்திரன்?

நம்மல மாதிரி அறிவுஜீவிங்க(!?) லெவலுக்கு கவிதை... சராசரிங்க லெவலுக்கு கருத்துக்களும் ஆய்வுக்கட்டுரைகளும் பேட்டிகளும்...!

சன்னாசி said...

சிவக்குமார், நல்ல கவிதை...

Vaa.Manikandan said...

மனுஷ்ய புத்திரனின் வலைப்பதிவில் இடம்பெறும் சிறந்த கவிதைகளுள் இடம்பெறும் தகுதி என் கவிதைக்கு இருப்பதாக நான் கருதவில்லை.வளர்ந்துவரும் கவிஞனான எனக்கு இது ஒரு நல்ல பட்டறையாக அமையும் என்பதனால் எனக்கு பிடித்த எனது காதல் கவிதைகளை அனுப்பியுள்ளேன்.

விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ளேன்.

குறிப்பாக பெயரிலி போன்றோரின் காட்டமான விமர்சனத்தை.

1.
உதிர்ந்துவிடும் கண்ணீரை
உள் இழுத்துவிடுகிறாய்.

ஒருவரும் உணர்ந்திடா
சிறு பொழுதில்.

ஒரு இதயம்
கசங்கிக்கொண்டிருக்கிறது
மரத்தில் சொட்டும் நீராக.

மெதுவாக.

2.
மரத்தில் இருந்து உதிரும்
பழுத்தயிலையொன்று
நினைவில் வருகிறது.

'ஒண்ணுமில்லையே'
என்ற பிரம்மாண்ட
சொல்லில்
உண்ர்த்தப்படும்
உன் எளிய
ப்ரியத்தில்.

Vaa.Manikandan said...

மனுஷ்ய புத்திரனின் வலைப்பதிவில் இடம்பெறும் சிறந்த கவிதைகளுள் இடம்பெறும் தகுதி என் கவிதைக்கு இருப்பதாக நான் கருதவில்லை.வளர்ந்துவரும் கவிஞனான எனக்கு இது ஒரு நல்ல பட்டறையாக அமையும் என்பதனால் எனக்கு பிடித்த எனது காதல் கவிதைகளை அனுப்பியுள்ளேன்.

விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ளேன்.

குறிப்பாக பெயரிலி போன்றோரின் காட்டமான விமர்சனத்தை.

1.
உதிர்ந்துவிடும் கண்ணீரை
உள் இழுத்துவிடுகிறாய்.

ஒருவரும் உணர்ந்திடா
சிறு பொழுதில்.

ஒரு இதயம்
கசங்கிக்கொண்டிருக்கிறது
மரத்தில் சொட்டும் நீராக.

மெதுவாக.

2.
மரத்தில் இருந்து உதிரும்
பழுத்தயிலையொன்று
நினைவில் வருகிறது.

'ஒண்ணுமில்லையே'
என்ற பிரம்மாண்ட
சொல்லில்
உண்ர்த்தப்படும்
உன் எளிய
ப்ரியத்தில்.

ROSAVASANTH said...

நீங்கள் கவிதை எழுதி அதற்கும் (வேண்டுமென்றே) காட்டமான விமர்சனம் வைக்கும் அளவிற்கு பெயரிலி வெறுப்பில் வாழ்பவரல்ல. முதலில் மற்ற மனிதனின் உணர்வுகளை கோபத்தின் அடிப்படையை சிறிதளவாவது புரிந்துகொள்ளும் உந்துதல் வேண்டும். அதற்கு பிறகு இலக்கியம் படிக்க போகலாம், பின் படைப்பதில் ஈடுபடலாம்.

இந்த விமர்சனம் உங்கள் கவிதை மீது அல்ல!

Anonymous said...

ஞான் புலவர் மொத்தினார்க்குமினியராக்கும்.
ஐயா கவிஞரே!

எனக்கென்னவோ நீர் கவிதை பன்னவேணுமென்கிறதுக்காகவே பன்னினமாதிரி தோணுது.

1.மொதலாவது கவிதையில
/உதிர்ந்து விழும் கண்ணீரை உள் இழுத்துவிடுகிறாய்/

இது சாத்தியமாய்யா?
பின் நவீனத்துவவாதீங்க சொல்வாங்க சாத்தியமில்லாததை பேசப்புடாதுண்ணு, அவங்க கிடக்கிறாங்க....
இதுதான் முன் நவீனத்துலயும்
முடியாதே?

/ஒரு இதயம் கசங்கிக் கொண்டிருக்கிறது
மரத்தில் சொட்டும் நீராக/

இங்கேயும் கசங்குதலுக்கான படுமம் சொட்டுதல் ஆகாது கண்ணா.

கசங்கின இதயம் குருதி சொட்டுறதைச் சொல்லுறதானாக்கா கசங்கிங்கிறதை வுட்டுப்புட்டு சிந்திறது என்றதோடை விட்டிருக்கலாம் கண்ணா. அல்லாக்காட்டியும் வேறை வார்த்தை பாவிச்சிருந்தியானாக்கா இன்னும் நன்னா இருந்திருக்கும்.

அடுத்த கவிதையை பார்க்கலாமா?

2./ஒண்ணுமில்லையே என்கிற பிரமாண்ட சொல்லில்/

'ஒன்றுமில்லையே' எங்கிறது பிரமாண்டமான சொல்லா என்ன?
சிறிய/எளிய சொல்லில் உணர்த்தப்படும் உன் பிரியத்தின் பிரமாண்டம் என்றிருக்கலாம்.

அது சரி, உமக்கு எதுக்குக்காணும் 'பழுத்த இலை ஞாபகம் வர்றது?
சுத்த Pessimist டா இருப்பீர்போல இருக்கே?

Anonymous said...

மொத்தினார்க்குமினியர்: ஞான் ஸொல்றது இன்னக்கா..........

கறந்த பாலு முலைக்கேறாது, விழுந்த கண்ணீரை ஒத்தலாம் உறிஞ்சலாமோ?

வெள்ளிக்கிழமைக்கு படிமம்/உருவகம் பன்னிட்டு அது அடுத்து வர்ற ஞாயித்துக்கிழமைக்கெண்டால்
இன்னா ஞாயமிது கண்ணா?

Anonymous said...

மொத்தினார்க்குமினியர்: ஞான் ஸொல்றது இன்னக்கா..........

கறந்த பாலு முலைக்கேறாது, விழுந்த கண்ணீரை ஒத்தலாம் உறிஞ்சலாமோ?

வெள்ளிக்கிழமைக்கு படிமம்/உருவகம் பன்னிட்டு அது அடுத்து வர்ற ஞாயித்துக்கிழமைக்கெண்டால்
இன்னா ஞாயமிது கண்ணா?

Vaa.Manikandan said...

நன்றி மெத்தினார்க்குமினியர்,ஜெஸ்ரி
எனது சொந்த வேலைப்பளுவின் காரணமாக என்னால்,விவாதத்தில் உடனடியாக பங்கு பெற இயலவில்லை.
ஆயிரம் பிரச்சினைகளை உள்ளடக்கி,"ஒண்ணுமில்லையே" என்று சொல்லும்போது,அது பிரம்மாண்ட பொருளினை பெறும்.
இலை விழும் போது அதன் மீது எந்த தடையும் செயல்படுவதில்லை.ப்ரியமும் எளிமயாக,எந்த விகல்பமும் இல்லாது இருக்கிறது.இதில் நேர்மறை சிந்தனை,எதிர்மறை சிந்தனை எல்லாம் எதுவும் இல்லை.
நான் உதிர்ந்துவிட்ட கண்ணீர் என குறிப்பிடவில்லை.உதிர்ந்துவிழும் கண்ணீர் என்பது கண்களில் தேங்கி நிற்பதை கூறலாம்.அப்போது நீர் விழாமல் தடுத்தல் என்பது இயலக்கூடிய காரியமே.
மற்றவிளக்கஙளுக்கு,ஜெஸ்ரி யின் பதில் போதுமானது என நினைக்கிறேன்.

வா.மணிகண்டன்